ADDED : ஏப் 29, 2025 05:42 AM

சென்னை: அரசு போக்குவரத்து கழகங்களில், டீசல் செலவை குறைக்க, 1,000 பஸ்கள், சி.என்.ஜி., என்ற, 'காஸ்' தொழில்நுட்பத்துக்கு மாற்றப்பட உள்ளன.
டீசலுக்கு மாற்றாக, சி.என்.ஜி., எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு, எல்.என்.ஜி., எனப்படும், இயற்கை எரிவாயு வாயிலாக பஸ்களை இயக்க, தமிழக அரசு முடிவு செய்துஉள்ளது. அதன்படி, ஏழு போக்குவரத்து கழகங்களில் சோதனை முயற்சியாக, சி.என்.ஜி., பஸ்கள் இயக்கப்பட்டன. கடந்த ஆண்டு, விரைவு பஸ்களிலும் சி.என்.ஜி., தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.
அரசு போக்குவரத்து கழகங்களில் தற்போது, 23க்கும் மேற்பட்ட பஸ்கள், சி.என்.ஜி., தொழில்நுட்பத்தில் இயக்கப்படுகின்றன. இந்த வகை பஸ்கள் வாயிலாக, ஒரு கி.மீ.,க்கு 3 முதல் 4 ரூபாய் வரை மிச்சமாகிறது.
அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
அரசு போக்குவரத்து கழகங்களில், நல்ல நிலையில் உள்ள பி.எஸ்., 4 வகை டீசல் பஸ்களை, சி.என்.ஜி., பஸ்களாக மாற்றுவதன் வாயிலாக, எரிபொருள் சேமிப்பு என்பதோடு, பராமரிப்பு செலவு, இயக்கச் செலவும் வெகுவாக குறைகிறது. அதன்படி, ஒரு பஸ்சுக்கு ஒரு மாதத்துக்கு, 75 ஆயிரம் ரூபாய் வரை மிச்சமாகிறது. ஒரு முறை எரிவாயு நிரப்பினால், 600 கி.மீ., துாரம் வரை பயணிக்க முடிகிறது. தற்போது, 1,000 பஸ்களை தேர்வு செய்து, சி.என்.ஜி., பஸ்களாக மாற்ற உள்ளோம்.
இதற்கான, டெண்டர் வெளியிடப்பட்டு, நிறுவனம் இறுதி செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இன்னும் ஆறு மாதங்களில், 1,000 பஸ்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.