ADDED : பிப் 26, 2024 12:17 AM
தஞ்சாவூர் : தஞ்சாவூரில், தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில மாநாடு நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற சங்க மாநில தலைவர் ஆறுமுகம் கூறியதாவது:
தமிழக அரசு தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு தனியாக இயக்குனரகம் அமைத்திருந்தாலும், டி.டி.சி.பி., மற்றும் எல்.பி.ஏ., ஆணை பெற வேண்டும் என்ற ஒரே காரணத்தால், 10,000க்கும் மேற்பட்ட பள்ளிகளின் அங்கீகாரம் இதுவரை புதுப்பிக்கப்படாமல் உள்ளது. டி.டி.சி.பி., அங்கீகாரம் நிபந்தனை இல்லாமல், மூன்று ஆண்டுகளுக்கு புதுப்பிக்க ஆணை வழங்க வேண்டும்.
கடந்த ஆண்டுக்கான தனியார் பள்ளிகளில், கட்டாய கல்வி சட்டத்தித்தின்படி, கல்விக்கட்டண தொகை 1,000 கோடி ரூபாயை அரசு உடனடியாக வழங்க வேண்டும். அந்தந்த கல்வி ஆண்டிலேயே இரண்டு தவணைகளாக வழங்க வேண்டும்.
கடந்த ஆண்டுகளில் உள்ளது போல, கட்டாய கல்வி சட்டத்தின்படி எல்.கே.ஜி., - யு.கே.ஜி. மாணவர்களுக்கு அதிகபட்ச தொகை 6,000 ரூபாயை 12,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். சுயநிதி பள்ளிகளின் புதுப்பித்தலை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை என்பதை ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை என உயர்த்த வேண்டும்.
இவ்வாறு கூறினார்.

