13 ஆண்டில் 103 புலிகள் இறப்பு; 10 வழக்குகள் விசாரணை நிலுவை
13 ஆண்டில் 103 புலிகள் இறப்பு; 10 வழக்குகள் விசாரணை நிலுவை
ADDED : ஜன 12, 2026 04:59 AM

சென்னை: 'தமிழகத்தில், 2012 முதல் 2025 வரையிலான 13 ஆண்டுகளில், 103 புலிகள் இறந்துள்ள நிலையில், 10 புலிகளின் வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன' என, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் முதுமலை, சத்தியமங்கலம், ஆனைமலை, களக்காடு - முண்டந்துறை, மேகமலை - ஸ்ரீவில்லிபுத்துார் போன்ற இடங்களில், புலிகள் காப்பகங்கள் உள்ளன. இப்பகுதிகளில், 306 புலிகள் இருப்பதாக, 2022ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப் பில் தெரியவந்தது.
இந்நிலையில் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையமான, என்.டி.சி.ஏ., கூறியிருப்பதாவது:
தமிழகத்தில், 2012 முதல் 2025 வரையிலான கால கட்டத்தில், 103 புலிகள் இறந்துள்ளன; 2025ல் மட்டும் 10 புலிகள் இறந்துள்ளன. அவற்றில், 58 புலிகள் இயற்கை முறையில் இறந்தது தெரிய வந்துள்ளது.
மேலும், 23 புலிகள் வேட்டை காரணமாக கொல்லப்பட்டுள்ளன; ஏழு புலிகள் இயற்கைக்கு மாறான முறையில் இறந்துள்ளன; ஐந்து புலிகள் இறந்ததில் எலும்புகள் மட்டுமே கிடைத்துஉள்ளன.
இவற்றில், 10 புலிகள் இறந்தது குறித்த விபரங்கள் அடிப்படையில், விசாரணை இன்னும் முடியாமல் உள்ளது. சரிபார்ப்பு நிலையிலேயே இந்த வழக்குகள் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பவாரியா கும்பல் கைவரிசை தமிழகத்தில், கோவை, நீலகிரி மாவட்டங்களில், புலிகளின் இறப்பு அதிகரித்து வருகிறது. இவ்விஷயத்தில் வனத்துறை அதிகாரிகள் உரிய கவனம் செலுத்த வேண்டும். வடமாநிலங்களில் இருந்து வரும் பவாரியா கும்பல், இதை செய்வதாக தொடர்ந்து கூறப்பட்டாலும், உள்ளூர் அளவில், இந்த வழக்கு விசாரணையை முடிப்பதிலேயே வனத்துறை அதிகாரிகள் குறியாக உள்ளனர். இதனால், பல வழக்குகள் முடிவுக்கு வராமல் உள்ளன. - வன உயிரின ஆர்வலர்கள்

