விழுப்புரத்தில் வெள்ள நீர் புகுந்ததால் 1,500 சிறு தொழில்கள் பாதிப்பு
விழுப்புரத்தில் வெள்ள நீர் புகுந்ததால் 1,500 சிறு தொழில்கள் பாதிப்பு
UPDATED : டிச 03, 2024 03:06 AM
ADDED : டிச 03, 2024 12:35 AM

சென்னை: விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், 1,500க்கும் மேற்பட்ட சிறு, குறுந்தொழில் நிறுவனங்களில் தண்ணீர் உட்புகுந்ததால், கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.
நெருக்கடியை சமாளிக்க, மின் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிப்பதுடன், நிவாரண தொகையை விரைந்து வழங்குமாறு, தமிழக அரசுக்கு தொழில்முனைவோர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து, விழுப்புரம் மாவட்ட குறு மற்றும் சிறு தொழில்கள் சங்கத்தின் தலைவர், அம்மன் கே.கருணாநிதி கூறியதாவது:
விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம் டவுன், விக்கிரவாண்டி, திண்டிவனம், வானுார், பூத்துறை, பட்டானுார், மரக்காணம் ஆகிய இடங்களில், 1,500க்கும் மேற்பட்ட சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன.
அவை இரும்பு, மரச்சாமான், ரப்பர் பொருட்கள், அச்சகம் உள்ளிட்ட தொழில்களில் முதன்மையாக ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொரு நிறுவனத்திலும் தலா ஐந்து முதல் 10 பேர் வரை பணிபுரிகின்றனர்.
வெள்ளப்பெருக்கால் மேற்கண்ட தொழில் நிறுவனங்களில் தண்ணீர் புகுந்ததால், இயந்திரங்கள், உற்பத்தி செய்த பொருட்கள், மூலப்பொருட்கள் என, அனைத்தும் நீரில் மூழ்கி விட்டன. மீண்டும் இயந்திரங்களை சரிசெய்ய முடியுமா என்று, தெரியவில்லை.
தண்ணீர் வடியாததால், தொழில்களை துவக்கவும் அதிக நாட்களாகும். அனைத்து நிறுவனங்களும் இயந்திரங்கள், தளவாடங்களை காப்பீடு செய்திருக்க வாய்ப்பில்லை. திடீரென ஏற்பட்ட இயற்கை சீற்றத்தால், தொழில்முனைவோர்கள், ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.
எனவே, பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு, மின் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். ஒவ்வொரு நிறுவனத்திற்கும், 50,000 முதல், 2 லட்சம் ரூபாய் வரை அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.