ADDED : செப் 30, 2024 06:08 AM
சென்னை : 'உலகில் இதய நோயால் ஆண்டுதோறும், 1.7 கோடி பேர் உயிரிழக்கின்றனர். எனவே, உடல் நலனை காப்பதில் கவனம் வேண்டும்' என, தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இளம் வயதினரும், இதய நோயால் இறப்பது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதற்காகவே விழிப்புணர்வு ஏற்படுத்த, செப்., 29, உலக இதய தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும், 1.7 கோடி பேர், இதய நோயால் இறப்பதாக, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பொதுவாக, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், முறையற்ற உணவு, உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம், புகைபிடித்தல் போன்றவை இதய நோய் பாதிப்புகளுக்கு காரணமாகின்றன.
தமிழக அரசின் சுகாதாரத்துறை, இதய நோய் பாதிப்புகளை தடுக்கும் வகையில், 'மக்களை தேடி மருத்துவம்' திட்டத்தின் வாயிலாக, பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று, அவர்களின் ரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றை பரிசோதித்து, நோயாளிகளை கண்டறிந்து, மருந்துகள் வழங்குவதுடன், மேல் சிகிச்சைக்கும் பரிந்துரைக்கிறது.
இத்திட்டத்தால், 1.94 கோடி பேர் நோயாளிகளாக கண்டறியப்பட்டு உள்ளனர்; 4.15 கோடி பேர் தொடர் சேவைகளை பெறுகின்றனர். இதய நோய்களை துவக்கத்திலேயே கண்டறியும் வகையில், 'இதயம் காப்போம் திட்டம்' அனைத்து மருத்துவமனைகளிலும், சிறப்பு மருத்துவரின் கீழ் செயல்படுகிறது. இதனால், ஆரம்ப சுகாதார நிலையத்தில், 10,474 பேரும், துணை சுகாதார நிலையத்தில், 613 பேரும் பயன் அடைந்துள்ளனர்.
மேலும், மாவட்டந்தோறும் நடைப்பயிற்சி தளங்கள் அமைக்கப்பட்டு, நடைபயிற்சிக்கு ஊக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. அனைவரும் ஆரோக்கியமான வாழ்வை மேற்கொண்டு, இதயத்தை காக்க வேண்டும்.
இவ்வாறு செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.