ஊரக இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்க 2,500 புதிய சமுதாய திறன் பள்ளிகள் துவக்கம்
ஊரக இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்க 2,500 புதிய சமுதாய திறன் பள்ளிகள் துவக்கம்
ADDED : மார் 29, 2025 02:48 AM
சென்னை,: ''தமிழகத்தில் நடப்பாண்டில், 'வாழ்ந்து காட்டுவோம் 3.0' என்ற திட்டம், 1,000 கோடி ரூபாயில் துவக்கப்படும்,'' என, துணை முதல்வர் உதயநிதி அறிவித்தார்.
ஊரக வளர்ச்சித் துறையில், வறுமை ஒழிப்பு திட்டங்கள் மற்றும் ஊரகக் கடன்கள் தொடர்பாக, சட்டசபையில் துணை முதல்வர் உதயநிதி வெளியிட்ட அறிவிப்புகள்:
'வாழ்ந்து காட்டுவோம் திட்டம் 2.0' வெற்றி பெற்றுள்ளது. நடப்பாண்டு மேலும் 120 வட்டாரங்களில், 1,000 கோடி ரூபாய் மதிப்பில், உலக வங்கியுடன் இணைந்து, 'வாழ்ந்து காட்டுவோம் திட்டம் 3.0' துவக்க நடவடிக்கை எடுக்கப்படும்
கிராமப்புற இளைஞர்கள், 42,000 பேருக்கு, வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலைவாய்ப்புடன் கூடிய, திறன் பயிற்சி, 66 கோடி ரூபாயில் வழங்கப்படும்
பழங்குடியினர், முதியோர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர் உள்ளிட்ட, 2,500 சிறப்பு சுய உதவிக் குழுக்களுக்கு, நடப்பாண்டு 25 கோடி ரூபாய், வாழ்வாதார நிதியாக வழங்கப்படும்
சென்னை மெரினா கடற்கரையில், கடந்த டிசம்பர் மாதம் நடந்த உணவுத் திருவிழாவின் வெற்றியை தொடர்ந்து, நடப்பாண்டு ஐந்து மண்டலங்களில், உணவுத் திருவிழாக்கள் நடத்தப்படும்
நடப்பாண்டு மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்கள், 400 கோடி ரூபாய் அளவில் விற்பனை செய்வது உறுதி செய்யப்படும்
நலிவு நிலை மக்களுக்காக, 100 கோடி ரூபாய், நலிவு நிலை குறைப்பு நிதி வழங்கப்படும். 6,000 சுய உதவிக் குழுக்களுக்கு, 90 கோடி ரூபாய் சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்படும்
திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில், நான்கு வட்டாரங்களில், வறுமையை ஒழிக்கும் விதமாக, 6,000 மிகவும் ஏழை மற்றும் நலிவுற்ற குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு, 25 கோடி ரூபாயில், நிலையான வாழ்வாதார நடவடிக்கைகள் எடுக்கப்படும்
அனைத்து மாவட்டங்களிலும், ஊரக இளைஞர்களுக்கு தொழில் பயிற்சிகள் அளிக்க, 2,500 புதிய சமுதாய திறன் பள்ளிகள் உருவாக்கப்படும். 15,000 சுய உதவி குழுக்களுக்கு, 22.50 கோடி ரூபாய் சுழல் நிதி வழங்கப்படும்
சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய, மாநில மற்றும் மண்டல அளவில், ஐந்து வணிக சந்திப்புகள், 2 கோடி ரூபாய் மதிப்பில் நடத்தப்படும்
மூன்று மதி அனுபவ அங்காடிகள், 1.50 கோடி ரூபாயில், மாவட்டங்களில் அமைக்கப்படும்
மாநிலம் முழுதும், மாவட்ட அளவிலான 100 வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் இளைஞர் திறன் திருவிழாக்கள், ஒரு கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும்
நகர்ப்புறங்களில் 50 பூங்காக்களின் பராமரிப்பை, சுய உதவிக்குழுக்கள் மேற்கொள்ள, ஒரு கோடி ரூபாயில் நடவடிக்கை எடுக்கப்படும்
மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய, அடுக்குமாடி மற்றும் பெருநிறுவனங்களில், 25 கண்காட்சிகள், 60 லட்சம் ரூபாய் மதிப்பில் நடத்தப்படும்
சிறப்பாக செயல்படும் சுய உதவிக் குழுக்கள், ஊராட்சி, வட்டார அளவிலான கூட்டமைப்புகளின் பிரதிநிதிகள், பிற மாநிலங்களுக்கு, 50 லட்சம் ரூபாய் செலவில் பட்டறிவுப் பயணம் அழைத்துச் செல்லப்படுவர்
நகர்ப்புறத்தில் உள்ள, 100 சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு, வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக, 100 மின் ஆட்டோக்கள் வழங்கப்படும்.
இவ்வாறு உதயநிதி அறிவித்தார்.