ADDED : செப் 30, 2024 07:06 AM

திருப்பூர் : உரிய ஆவணங்கள் இன்றி, திருப்பூரில் சுற்றித் திரிந்த வங்கதேசத்தினர் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
வங்க தேசத்தில் இருந்து மேற்கு வங்கம் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவி, வட மாநில நபர்கள் என்ற போர்வையில், திருப்பூரில் வேலைக்குச் சேர்ந்து பதுங்கி உள்ள நபர்கள் குறித்து மாநகர போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
கடந்த வாரம், ஒரு கும்பலாக சில நபர்கள் சென்னைக்கு ரயிலில் வந்து, திருப்பூர் பகுதியில் வேலை தேடித் திரிந்த போது தெற்கு போலீசாரிடம் பிடிபட்டனர்.
ஆறு பேர் உரிய ஆவணங்கள் இன்றியும், போலி ஆவணங்களுடனும் இருந்ததால் கைது செய்யப்பட்டனர்.
அவர்களுடன் வந்த மேலும் மூன்று பேர் தலைமறைவாகினர். நேற்று தெற்கு போலீசார் நடத்திய சோதனையின் போது, இவர்கள் சிக்கினர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்ததும், வங்க தேசம், நாராயண் கஞ்ச் பகுதியைச் சேர்ந்த மத்யூர் ரகுமான், 39; சுலைமான், 38 மற்றும் மானிக் ஹூசேன், 37 என்பதும் தெரிந்தது. போலீசார் அவர்களைக் கைதுசெய்து மேலும் விசாரணை நடத்துகின்றனர்.