நீண்ட கால நிலுவை கடன் வசூலிக்கும் திட்டத்துக்கு 3 மாதம் அவகாசம் நீட்டிப்பு
நீண்ட கால நிலுவை கடன் வசூலிக்கும் திட்டத்துக்கு 3 மாதம் அவகாசம் நீட்டிப்பு
ADDED : ஜூலை 02, 2025 10:33 PM
சென்னை:கூட்டுறவு வங்கிகளில், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கடன்களை வசூலிக்கும் சிறப்பு திட்டத்திற்கு, செப்டம்பர் வரை அரசு அவகாசம் அளித்துள்ளது.
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் கடன், நகை கடன், தனி நபர் கடன் உட்பட, பல்வேறு பிரிவுகளில் கடன்கள் வழங்கப்படுகின்றன.
அதில், பண்ணை சாரா கடன் பிரிவில் கடன் வாங்கிய சிலர், பல ஆண்டுகளாக அசல், வட்டியை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளனர்.
அபராத வட்டி
அவர்கள் கடனுக்கு பிணையாக வழங்கிய சொத்து ஆவணங்கள் வங்கிகளில் உள்ளன. கடன் நிலுவைதாரர்கள் வட்டி, அபராத வட்டி போன்றவை சேர்த்து, அசலுடன், 16 சதவீதம் வட்டி செலுத்த வேண்டியுள்ளது. பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள கடனை வசூலிக்கவும், சொத்து ஆவணங்களை திரும்ப வழங்கவும், சிறப்பு கடன் தீர்வு திட்டத்தை, 2023ல் கூட்டுறவு துறை துவக்கியது.
அத்திட்டத்தின் கீழ் அபராத வட்டி உள்ளிட்ட இதர செலவினங்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, கடன் தொகைக்கு 9 சதவீதம் வட்டி மட்டும் செலுத்த வேண்டும். சிறப்பு கடன் தீர்வு திட்டத்தின் கீழ் கடன்களை தீர்வு செய்ய, 2.69 லட்சம் பேர் தகுதி பெற்றனர். அவர்கள் செலுத்த வேண்டிய தொகை 919 கோடி ரூபாய்.
ஆனால், 45,174 பேரிடம் இருந்து, 166 கோடி ரூபாய் மட்டும் வசூலான நிலையில், திட்டத்தின் அவகாசம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்தது.
அனுமதி
எனவே, சிறப்பு கடன் தீர்வு திட்ட அவகாசத்தை, மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்குமாறு, அரசிடம் கூட்டுறவு துறை அனுமதி கேட்டது. இதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. மீண்டும் கோரிக்கை விடுத்ததை அடுத்து, கடந்த மாதம் 26ம் தேதி முதல், மூன்று மாதங்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.

