அரசு பள்ளி மாணவர் சேர்க்கை 5 நாளில் 36,000 பேர் 'அட்மிஷன்'
அரசு பள்ளி மாணவர் சேர்க்கை 5 நாளில் 36,000 பேர் 'அட்மிஷன்'
ADDED : மார் 07, 2024 11:54 AM
சென்னை:அரசு பள்ளிகளில், ஐந்து நாட்களில், 36,000 மாணவ - மாணவியர் புதிதாக சேர்ந்துள்ளனர்.
தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், ஜூன் முதல் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.
ஆனால், அதற்கு முன்னதாக தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து விடுவதால், பெரும்பாலான மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேருவது வழக்கம்.
இந்நிலையில், அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், நடப்பு கல்வியாண்டு முதல் மார்ச் மாதத்திலேயே மாணவர் சேர்க்கை துவக்கப்பட்டு உள்ளது. கடந்த, 1ம் தேதி முதல் 6ம் தேதி வரையிலும், ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற ஐந்து நாட்களில், 35,809 மாணவ - மாணவியர் புதிதாக சேர விண்ணப்பம் அளித்துள்ளனர். இவர்களில், பெரும்பாலானவர்கள் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்துள்ளனர்.
வரும் நாட்களிலும், மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்தும் வகையில், ஆசிரியர்கள் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய தொடக்கக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவுறுத்தியுள்ளார்.

