கோவை இன்ஜி., மாணவர் கொலை 5 பேர் கைது; 9 பேர் மீது வழக்கு
கோவை இன்ஜி., மாணவர் கொலை 5 பேர் கைது; 9 பேர் மீது வழக்கு
ADDED : ஆக 13, 2026 05:48 AM

கோவை: கோவை இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர் அடித்து கொல்லப்பட்டது தொடர்பாக, சக மாணவர்கள் ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை, மலுமிச்சம்பட்டியில் உள்ள ஹிந்துஸ்தான் இன்ஜினியரிங் கல்லுாரி மூன்றாமாண்டு மாணவர் அமுதன், 19, கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர். இவர், கல்லுாரி அருகே அம்பாள் நகரில், சக மாணவர்களின் அறையில் தங்கியிருந்தார்.
தகாத வார்த்தை கடந்த 10ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு, தன் நண்பனை தகாத வார்த்தையில் பேசியதற்காக, அமுதன் உள்ளிட்ட ஆறு பேர், ஒத்தக்கால்மண்டபத்தில் சக மாணவர்கள் தங்கியிருந்த வீட்டுக்கு சென்று தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
அதில், அமுதனை மட்டும் அடையாளம் கண்ட எதிர் தரப்பினர், காலை 8:00 மணியளவில் கல்லுாரிக்கு பின்புறம் உள்ள மைதானத்துக்கு அழைத்து சென்று தாக்கினர்.
பின்னர், தாக்கிய மாணவர்களே பைக்கில் அழைத்து சென்று, அவர் தங்கியுள்ள அறையில் இறக்கி விட்டுள்ளனர். மதியம் 2:00 மணிக்கு மேல் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அமுதன், 3:00 மணியளவில் உயிரிழந்தார்.
செட்டிப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். மாணவர் கொலை தொடர்பாக, சக மாணவர்களான கடலுாரைச் சேர்ந்த ஆராமுதன், 20, சிவகங்கை அரவிந்த், 21, திருவாரூர் சிவா ரோஹித், 20, பெரம்பலுார் மணி பாலு, 20, மற்றும் திருவள்ளூரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
போதைப்பொருள் போதைப்பொருள் பயன்படுத்தியவர்கள் குறித்து விபரம் அளித்ததால் தான், மாணவர் அமுதன் அடித்து கொல்லப்பட்டதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.
போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இவ்வழக்கில் ஐந்து பேர் அடையாளம் காணப்பட்டு, இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
'மேலும், ஒன்பது பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருள் பயன்பாடு குறித்த குற்றச்சாட்டு உண்மையல்ல.
'முதலில் தாக்குதலில் ஈடுபட்டது, அமுதன் குழுவினர்; அதற்கான பதில் தாக்குதலில் சீனியர் மாணவர்கள் ஈடுபட்டபோது, அசம்பாவிதம் நடந்து உள்ளது.
'இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கேமரா பதிவுகளை சேகரித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்' என்றார்.
