UPDATED : ஏப் 25, 2024 11:13 PM
ADDED : ஏப் 25, 2024 11:10 PM

மணல் கொள்ளை வழக்கில், ஐந்து மாவட்ட கலெக்டர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகினர். அவர்களிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்பட்டது.
ஆறுகளில் மணல் எடுத்து குவாரிகளில் விற்பனை செய்ய, புதுக்கோட்டை ராமச்சந்திரன், கரிகாலன், திண்டுக்கல் ரத்தினம் ஆகியோர் ஒப்பந்ததாரர்களாக அரசிடம் உரிமம் பெற்றனர்.
பெரும் நஷ்டம்
அரசு நிர்ணயித்த அளவை விட, பல மடங்கு அதிகமாக மணல் அள்ளி விற்று, கோடி கோடியாக சம்பாதித்தனர்; அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுத்தினர் என்ற புகார் எழுந்தது.
நீர்வளத்துறை, கனிம வளத்துறை அதிகாரிகளும், இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்து, கோடிகளை குவித்துள்ளனர்.
அரசியல் செல்வாக்கு, அதிகார பின்னணி காரணமாக, மணல் கொள்ளை தடங்கல் இல்லாமல் நீடித்தது. பல ஆயிரம் கோடிகள் கைமாறியதில், சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்திருப்பதாக தெரிய வந்ததை அடுத்து, மத்திய அரசின் அமலாக்கத்துறை களம் இறங்கியது.
வழக்கு பதிவு செய்து, கடந்த செப்டம்பரில் மணல் குவாரிகள், ஒப்பந்த தாரர்களின் வீடுகள், அலுவலகம், தமிழக அரசு நீர்வளத்துறை அலுவலகம் என, 34 இடங்களில் சோதனை நடத்தியது.
ஆவணங்கள், 12.82 கோடி ரூபாய் ரொக்கம், 56.86 லட்சம் மதிப்புள்ள நகைகளை கைப்பற்றினர். அண்ணா பல்கலை விஞ்ஞானிகள், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் உதவியுடன், 'டிஜிட்டல்' கருவிகள் வாயிலாக குவாரிகளை அளவிட்டு பெருமளவில் மணல் கொள்ளை நடந்ததை உறுதி செய்தனர். 130 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டன.
நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் முத்தையா அளித்த வாக்குமூலம் அடிப்படையில், திருச்சி, தஞ்சாவூர், கரூர், வேலுார், அரியலுார் மாவட்ட கலெக்டர்களிடம் விசாரிக்க, 'சம்மன்' அனுப்பினர்.
கலெக்டர்கள் அதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். தமிழக அரசும் அவர்களுக்கு ஆதரவாக வாதிட்டது. ஐகோர்ட் அதை ஏற்று, அமலாக்கத்துறையின் சம்மனுக்கு இடைக்கால தடை விதித்தது.
அதை எதிர்த்து, அமலாக்கத்துறை சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. 'கலெக்டர்களுக்கு தேர்தல் வேலை உள்ளதால், விசாரணைக்கு ஆஜராக இயலாது' என, தமிழக அரசு வாதிட்டது.
கலெக்டர்கள் சார்பாக, தமிழக அரசு அப்பீலுக்கு வந்ததை கோர்ட் ஏற்கவில்லை. 'அமலாக்கத் துறையும் அரசின் அங்கம் தான். உண்மையை கண்டறிய, அது எடுக்கும் முயற்சிகளுக்கு மாநில அரசும், அதிகாரிகளும் ஒத்துழைப்பதில் என்ன தயக்கம்?' என்று கேட்டது.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, தேர்தல் முடிந்ததும் கலெக்டர்கள் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
சூடு பிடிப்பு
அதன்படி, நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் தஞ்சாவூர் தீபக் ஜேக்கப், திருச்சி பிரதீப் குமார், வேலுார் சுப்புலட்சுமி, கரூர் தங்கவேலு, அரியலுார் ஆனி மேரி ஸ்வர்ணா ஆகியோர் நேற்று ஆஜராகினர்.
அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. இரவு எட்டு மணி தாண்டியும் விசாரணை நீடித்தது. ஐந்து கலெக்டர்களின் வாக்குமூலமும் வீடியோ பதிவு செய்யப்பட்டு உள்ளது. தீவிர விசாரணை நடப்பதால், மணல் கொள்ளை வழக்கு சூடுபிடித்துள்ளது.
- நமது நிருபர் -

