ADDED : பிப் 04, 2024 05:25 AM
சென்னை: மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு தென்கைலாய பக்தி பேரவை சார்பில் தமிழகம், புதுச்சேரியில் ஆதியோகி ரத யாத்திரை, 60 நாட்கள், 35,000 கி.மீ., துாரம் பயணித்து ஆயிரக்கணக்கான கிராமங்களில் வலம் வர உள்ளது.
சென்னையில் பேரவையின் தன்னார்வலர் மகேந்திரன் கூறியதாவது:
கோவை ஈஷா யோக மையத்தில், 30வது ஆண்டாக மஹாசிவராத்திரி விழா மார்ச், 8ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தென் கயிலாய பக்தி பேரவை சார்பில், மஹாசிவராத்திரி விழாவிற்கு பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக ஆண்டுதோறும் ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான நான்கு ரத யாத்திரைகள் கோவையில் உள்ள ஆதியோகி முன் ஜன., 5ம் தேதி தொடங்கின. மார்ச் 8ம் தேதி வரை இரண்டு மாதங்களில், ஆயிரக்கணக்கான கிராமங்கள் மற்றும் நகரங்கள் வழியாக இந்த ரதங்கள் பயணிக்க உள்ளன.
அந்த வகையில் தமிழகத்தின் வட மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களுக்கு ஆதியோகி ரதம் இந்த மாதம் வருகிறது.
சென்னையில் பிப்., 21ம் தேதி தொடங்கி மார்ச், 7 ஆம் தேதி வரை அம்பத்துார், போரூர், கோடம்பாக்கம், அண்ணாநகர், புரசைவாக்கம், மயிலாப்பூர், குரோம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் இந்த ரதம் பயணிக்க உள்ளது.
, திருவள்ளூரில் பிப்., 22ம் தேதியும், செங்கல்பட்டில் மார்ச், 4 தேதியும் ரதங்கள் வலம் வர இருக்கின்றன. மார்ச், 8ம் தேதி, மஹாசிவராத்திரி நாளன்று கோவை ஈஷா யோக மையத்தை இந்த ரதங்கள் சென்றடையும்.
இதனுடன் சிவ யாத்திரை எனும் பாத யாத்திரையையும் சிவாங்கா பக்தர்கள் மேற்கொண்டு வருகின்றனர். தமிழகம், கர்நாடகாவில் இருந்து சிவன் திருவுருவம் தாங்கிய ஏழு தேர்களை இழுத்தபடி ஏழு குழுக்களாக, வருகின்றனர்.
பிப்., 16 அன்று தொடங்கப்படும் இந்த யாத்திரை மார்ச், 6ம் தேதி கோவை ஈஷா யோக மையத்தில் முடிவடையும். தமிழகத்தில், 36 இடங்களில் மஹாசிவராத்திரி விழா நேரலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
***