எண்ணூர் அனல்மின் நிலையத்தில் சாரம் சரிந்து 9 பேர் பலி
எண்ணூர் அனல்மின் நிலையத்தில் சாரம் சரிந்து 9 பேர் பலி
UPDATED : அக் 01, 2025 02:23 PM
ADDED : செப் 30, 2025 07:40 PM

சென்னை: எண்ணூர் அனல்மின் நிலையத்தின் 4வது அலகில் விரிவாக்கப் பணியின் போது, சாரம் சரிந்து விழுந்ததில் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 9 பேர் உயிரிழந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா வாயலுாரில், எண்ணுார் சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் தலா, 660 மெகா வாட் திறனில், இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையத்தை மின் வாரியம் அமைத்து வருகிறது. இதன் கட்டுமான பணிகளை, மத்திய அரசின் பி.எச்.இ.எல்., எனப்படும், 'பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ்' நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
கட்டுமான பணிகளில் 30க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சாரம் சரிந்து விழுந்ததில், தொழிலாளர்கள் பலர் சிக்கி படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 9 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
படுகாயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில், சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரூ.2 லட்சம்
பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது: சென்னையில் சாரம் சரிந்து உயிரிழந்த சம்பவம் அறிந்து வருத்தம் அடைந்தேன். துயரமான இந்த நேரத்தில், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்துக்கு நினைவாக எனது எண்ணம் உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
ரூ.10 லட்சம்
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது:எண்ணூரில் பெல் நிறுவனம் மேற்கொண்டு வரும் மின் உற்பத்தி நிலையக் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒன்பது பணியாளர்கள் இறந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மின்துறை அமைச்சர் சிவசங்கர், டான்ஜெட்கோ தலைவர் ராதாகிருஷ்ணனையும் உடனே நேரில் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்த பணியாளர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கிடவும், அவர்களது உடலை அவர்களது சொந்த மாநிலத்திற்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அந்த பதிவில் முதல்வர் தெரிவித்துள்ளார்.