ADDED : நவ 08, 2025 02:07 AM
மதுரை: ''வன்கொடுமை சட்டத்தின்படி சம்பவம் நடந்த 2 மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் 98 சதவீத குற்றப்பத்திரிகைகள் உரிய நேரத்தில் பதிவு செய்யப்படவில்லை,'' என எவிடன்ஸ் அமைப்பின் செயல் இயக்குநர் கதிர் தெரிவித்தார்.
மதுரையில் அவர் கூறியதாவது:
தமிழகத்தின் 26 மாவட்டங்களில் பாலியல், ஜாதிய வன்கொடுமைக்கு ஆளான, 16 முதல் 66 வயதுடைய 90 தலித் பெண்களின் வழக்குகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் 43 பெண்கள் கூலித்தொழிலாளிகள். 27 பேர் பலமுறை வன்கொடுமைக்கு உள்ளானவர்கள். வன்கொடுமைகளில் ஈடுபட்ட குற்றவாளிகளின் வயது வரம்பு 15 முதல் 68 வரை.
90 வழக்குகளிலும் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளது. 82 சம்பவங்களில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட 85 பெண்களுக்கு நிவாரணம் கிடைத்துள்ளது. எனினும் 90ல் 3 வழக்குகளுக்கு மட்டுமே தண்டனை கிடைத்துள்ளது. 69 வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. 90 வழக்குகளிலும் டி.எஸ்.பி., முதல் டி.ஜி.பி., வரை, கலெக்டர் முதல் தலைமை செயலர் வரை பல்வேறு துறை அதிகாரிகள், ஆணையங்களுக்கு பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்துள்ளனர்.
எனினும் குறித்த நேரத்தில் நிவாரணம் வழங்கப்படவில்லை. வன்கொடுமை சட்டத்தின் படி சம்பவம் நடந்த 2 மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, 3 மாதங்களில் தண்டனை வழங்க வேண்டும். ஆனால் 98 சதவீத குற்றப்பத்திரிகைகள் உரிய நேரத்தில் பதிவு செய்யப்படவில்லை. 5 ஆண்டுகள் கடந்தும் நீதிமன்றத்திற்கு வழக்கு வராத போக்கு நிலவுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பயம், கோபம், மன அழுத்தத்திற்கு ஆளாகி நீதியின் மீதான நம்பிக்கையை இழந்துள்ளனர்.
காலதாமதமான நடவடிக்கைகளால், வழக்குகளை வாபஸ் பெறும் நிலைக்கு பாதிக்கப்பட்டவர்கள் தள்ளப்படுவதோடு, இத்தகைய குற்றங்கள் தொடர்ந்து நடக்கின்றன. கடந்த 3 ஆண்டுகளில் வன்கொடுமை வழக்குகள் 40 சதவீதம் அதிகரித்துள்ளது. அந்த வேகத்திற்கு ஈடுகொடுக்காமல் அரசு இயந்திரம் முடங்கியுள்ளது. வழக்குகள் அதிகரிக்க போதை கலாசாரமும் ஒரு காரணம். அதற்கு உதாரணம் கோவை சம்பவம்.
நிலுவையிலுள்ள 7500க்கும் மேற்பட்ட வன்கொடுமை வழக்குகளில் 10 சதவீத வழக்குகள் மதுரையில் உள்ளன.
இவ்வாறு கூறினார்.

