ADDED : ஜன 22, 2024 12:01 AM

கிட்டத்தட்ட, 500 ஆண்டுகளுக்கு முன், சீரும் சிறப்புமாக இருந்த அயோத்தி, நீண்ட இடைெவளிக்குப் பின், மீண்டும் இன்று புத்துயிர் பெற்றுள்ளது. மனிதனாய் பிறப்பவன், இப்படி தான் வாழ வேண்டும் என்று உலகுக்கு வழிவகுத்துக் கொடுப்பதற்காக அவதரித்த, தசரதச் சக்ரவர்த்தியின் மகன் ராமர் வாழ்ந்த இடத்தை, மக்கள் கோலாகலமாகக் கோவில் கட்டிக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். இடத்தை அபகரிக்க, மன்னர் பாபர் போட்ட சதியில் சிக்கி, இன்னுயிர் ஈந்த நம் முன்னோர் கதையை, நம் நாடு சுதந்திரம் பெற்ற பிறகும் வெளிக்கொணர, அப்போதைய ஆட்சியாளர்கள் யாரும் முன்வரவில்லை.
வரலாறை மூடி மறைத்து, எதுவுமே நடக்காதது போல காட்சிப்படுத்த முயன்றவர்களின் முகத்திரையைக் கிழிக்க, ஒரு சிலர் கிளம்பிய போது தான், நாம் எவ்வளவு ஏமாற்றப்பட்டோம் என்பது, நாட்டு மக்களுக்குப் புரிந்தது. இப்போது, அந்த உண்மைக் கதை சுருக்கமாக...
மஹாவிஷ்ணுவின் அவதாரமாகக் கொண்டாடப்படும் ராமருக்கு, அவர் பிறந்த இடமான அயோத்தியில் கோவில் இருந்தது. 16ம் நுாற்றாண்டில், படையெடுத்து வந்த பாபர் படைத் தளபதி, ராமர் கோவிலை இடித்து, பாப்ரி மசூதி கட்டினார்
இடிக்கப்பட்ட கோவிலிலிருந்து அப்புறப்படுத்தி வைக்கப்பட்டிருந்த ராமர் - சீதா சிலைகளை, 1949, டிசம்பர் 22 - 23ம் தேதி இரவில், மசூதி நிர்வாகத்தினர், சில பிரச்னைகளைத் தவிர்க்க, மசூதிக்குள் யார் கண்ணிலும் படாமல் வைத்தனர்
1950 முதல், மசூதியை மாநில நிர்வாகம் கையகப்படுத்தியது; ஹிந்துக்கள் இந்த மசூதிக்குள் ராமரை வழிபட அனுமதிக்கப்பட்டனர்
1980ல், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு, இந்த இடத்திலேயே ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்ற எண்ணத்தை முன்னிலைப்படுத்தி, ஒரு இயக்கத்தை நடத்தத் துவங்கியது
பின், பிரதமராக இருந்த ராஜிவ் காந்தி, இந்த இடத்தில், 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று எழுதப்பட்ட செங்கல் கொண்டு கட்டடம் கட்ட அனுமதித்தார்; 1989ல் ஹிந்து அமைப்பினர் சிலர், மண்ணில் ஆழமாக குழி தோண்டி செங்கல் அடுக்கி கட்டுமானத்தைத் துவக்கினர்
சலசலப்பு துவங்கிய நேரத்தில், பல ஹிந்து அமைப்புகள் ஒன்று சேர்ந்து, 1992ல், பாபர் மசூதியை இடித்தன. விவகாரம், வழக்காகியது. வெளிநாடுகளில், ஹிந்து கோவில்கள் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின
2005ல் தீவிரவாதிகள் சிலர், ராமர் கோவிலை தகர்க்க முயன்றனர்; தொடர்ந்து வழக்கு நடந்தது. பிரச்னைக்குரிய இடத்தில் அகழாய்வு செய்து உண்மையைக் கண்டறிய, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதனடிப்படையில் நடந்த அகழாய்வில், மசூதிக்கு அடியில் ஹிந்து கோவில் இருந்ததற்கான ஆதாரங்களை, வல்லுனர்கள் கோர்ட்டில் சமர்ப்பித்தனர்
இதையடுத்து, 2019ல், பாபர் மசூதியை ஹிந்துக்களிடம் ஒப்படைக்குமாறும், மசூதி கட்டிக் கொள்ள வேறு இடம் ஒதுக்குமாறும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது
2020, ஆக., 5ல், இந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட, பூமி பூஜை செய்யப்பட்டது
ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா என்ற அறக்கட்டளை உருவாக்கப்பட்டு, முழுதும் பக்தர்களிடம் இருந்து நன்கொடை திரட்டி, அதன் மூலம் கோவில் கட்ட தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, அழகாக, பிரமாண்டமாக, உலகே வியக்கும் வகையில் கோவில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதோ... இன்று கோலாகலமாக, குழந்தை ராமர் தன் ஆட்சியை, அயோத்தியில்இருந்து மீண்டும் துவங்க இருக்கிறார்!