ADDED : ஜன 26, 2026 11:27 AM

நமது சிறப்பு நிருபர்
மொபைல் செயலி வாயிலாக, ஆதாரில் திருத்தம் செய்வது மட்டுமல்லாமல், 'அப்டேட்' செய்யும் கால அளவும் குறைந்துள்ளது.
ஆதார் கையாளவும், ஆதாரில் தேவையான திருத்தம் சுயமாக மேற்கொள்ளவும், முக அங்கீகார வசதியுடன் கூடிய 'ஆதார்' (aadhaar) மொபைல் செயலி நடைமுறையில் உள்ளது; அடுத்தடுத்து புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள மொபைல்போன் எண் மற்றும் முகவரி விவரங்களை, செயலி வாயிலாக, தனிநபர் சுயமாக திருத்தம் செய்துகொள்ள முடியும். ஆதாரில் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ள எண்ணுக்கு ஓ.டி.பி., பெற்று, புதிய எண் பதிவு செய்து, முக அங்கீகாரத்தை உறுதிப்படுத்தி, மொபைல் எண் மாற்றத்துக்கு சுலபமாக விண்ணப்பிக்கலாம்.
அதேபோல், உரிய ஆவணங்களை இணைத்து, முகவரி மாற்றத்துக்கும் விண்ணப்பிக்கலாம். இதற்கான கட்டணமாக, 75 ரூபாய் மட்டும் செலுத்த வேண்டும். ஆதாரில் பெயர் மாற்றம், இ-மெயில் ஐ.டி., மாற்றம் ஆகிய வசதிகளும் விரைவில் சேர்க்கப்பட உள்ளன.
ஆதாரில் திருத்தம் மேற்கொள்ள விண்ணப்பித்து, நாள் கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலையும் விலகியுள்ளது. விண்ணப்பித்த ஓரிரு நாட்களிலேயே, ஆதாரில் மொபைல் எண், முகவரி ஆகியவை அப்டேட் செய்யப்படுகிறது. இது, பொதுமக்களை நிம்மதியடைய செய்துள்ளது.
தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் நடந்து வரும் நிலையில், ஆதார் அப்டேட் வேகமாகியிருப்பதால், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், முகவரி, மொபைல் எண் மாற்றம் உட்பட திருத்தத்துக்கு விண்ணப்பிப்போர், ஆதாரை ஆவணமாக இணைப்பதில் இருந்த சிக்கல்களும் விலகியுள்ளது.

