ADDED : செப் 03, 2025 02:50 AM
சென்னை:நடிகர் ரவி மோகன், படத்தில் நடிப்பதற்காக பெற்ற, முன் பணத்தை திருப்பி தரக்கோரிய வழக்கில், நடுவராக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி எம்.சத்தியநாராயணனை அணுக, இரு தரப்பினருக்கும், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
படத்தில் நடிப்பதற்காக பெற்ற, 6 கோடி ரூபாய் முன் பணத்தை திரும்ப தரும்படி, நடிகர் ரவி மோகனுக்கு உத்தரவிடக்கோரி, 'பாபி டச் கோல்டு யுனிவர்சல்' நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதேபோல், கொடுத்த கால்ஷீட்டில் படத்தை தயாரிக்காமல், தனக்கு இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறி, 9 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க, தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவிடக் கோரி, நடிகர் ரவி மோகனும் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதி, 5.90 கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை தாக்கல் செய்ய, நடிகர் ரவி மோகனுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து, நடிகர் ரவி மோகன் தரப்பில், மேல் முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கு நீதிபதிகள் எம்.சுந்தர், எம்.சுதீர் குமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
'இந்த விவகாரம் தொடர்பாக, நடுவராக நியமிக்கப்பட்டுள்ள, நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன், செப்., 13ம் தேதி வழக்கு விசாரணைக்கு வர உள்ளது' என, நடிகர் ரவிமோகன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
வழக்கு தொடர்பான நிவாரணங்களுக்கு நடுவரை அணுக வேண்டும். பட தயாரிப்பு நிறுவனம், உயர் நீதிமன்றத்தில் எழுப்பிய அனைத்து கோரிக்கைகளையும், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுகளையும் கருத்தில் கொள்ளாமல், நீதிபதி சத்தியநாராயணன் விசாரிப்பார்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.