கனவு இல்லம் திட்டத்தில் வீடுகள் கட்ட கூடுதலாக ரூ.1,400 கோடி ஒதுக்கீடு
கனவு இல்லம் திட்டத்தில் வீடுகள் கட்ட கூடுதலாக ரூ.1,400 கோடி ஒதுக்கீடு
ADDED : மார் 22, 2025 02:20 AM
சென்னை : தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, 2024 - 25ம் ஆண்டுக்கான இறுதி துணை மதிப்பீடுகளை, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தார்.
அவர் பேசியதாவது:
இந்த துணை மதிப்பீடுகள், மொத்தம், 19,287 கோடி ரூபாய் நிதி ஒதுக்கத்திற்கு வகை செய்கின்றன. இதில், 12,693.36 கோடி ரூபாய் வருவாய் கணக்கிலும், 6,429.20 கோடி ரூபாய் கடன் கணக்கிலும் அடங்கும்.
துணை மதிப்பீடுகளில், உணவு துறையில், தமிழக நுகர்பொருள் வாணிப கழகத்தின் நிதி நிலை தன்மையை உயர்த்தவும், உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், பங்கு மூலதன உதவியாக, 2,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சி துறையில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட, 1,400 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எரிசக்தி துறையில், மின் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகைக்காக, 1,036 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துறையில் பஸ்கள் வாங்குவதற்கு, மாநில போக்குவரத்துக்கு கழகங்களுக்கு கூடுதலாக, 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
கடந்த, 2024ல் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை காலங்களில் பெய்த கன மழை, 'பெஞ்சல்' புயல் பாதிப்புகளின் துயர் தணிப்பு பணிகளுக்கு, 901.84 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இறுதி துணை மதிப்பீடுகளை சட்டசபை ஏற்று, ஒப்புதல் அளிக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.