வீடு கட்டும் திட்டத்தில் கூடுதல் நிதி எதிர்பார்ப்பு
வீடு கட்டும் திட்டத்தில் கூடுதல் நிதி எதிர்பார்ப்பு
ADDED : ஆக 13, 2026 05:43 AM
சென்னை: நடப்பு நிதியாண்டில், வீடு கட்டும் திட்டத்துக்கு, நிதி அதிகரித்துள்ள நிலையில், ஏற்கனவே வீடு கட்ட அனுமதி பெற்ற பயனாளிகள், தங்களுக்கும் கூடுதல் நிதி வழங்க வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த தி.மு.க., ஆட்சியில், 'கலைஞர் கனவு இல்லம் திட்டம்' என்ற பெயரில், ஆண்டுக்கு ஒரு லட்சம் வீடுகள் கட்டப்பட்டு வந்தன. இதற்காக அரசு சார்பில், ஒரு வீட்டிற்கு, 3.50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
இந்நிலையில், புதிதாக ஆட்சிக்கு வந்த த.வெ.க., அரசு, அந்த திட்டத்தை, 'வெற்றி வீடு திட்டம்' என பெயர் மாற்றம் செய்ததுடன், ஆண்டுக்கான பயனாளிகள் எண்ணிக்கையை, 70,000 மாக குறைத்தது.
அதேநேரத்தில், கட்டுமான நிதியை, வீட்டிற்கு 3.50 லட்சம் ரூபாய் என்பதை, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தியது.
இதைத் தொடர்ந்து, கடந்த ஆட்சியில், வீடு கட்ட அனுமதி பெற்றோர், தங்களுக்கும் நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:
கலைஞர் கனவு இல்லம் திட்டத்துக்கு, இடைக்கால பட்ஜெட்டில் 3,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
அதன்படி, தற்போது வரை 17,000க்கும் அதிகமான வீடுகள், தலா 3.50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகின்றன. இனி, 5 லட்சம் ரூபாய் செலவில் வீடு கட்டப்படும் என, அரசு அறிவித்துள்ளது.
இதனால், ஏற்கனவே அனுமதி பெற்ற பயனாளிகளும், கூடுதல் நிதியை எதிர்பார்க்கின்றனர். இதை அரசின் கவனத்திற்கு எடுத்து சென்றுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
