அ.தி.மு.க., சின்னம் விவகாரம் பழனிசாமிக்கு 'நோட்டீஸ்'
அ.தி.மு.க., சின்னம் விவகாரம் பழனிசாமிக்கு 'நோட்டீஸ்'
ADDED : மார் 12, 2024 01:27 AM
சென்னை: 'அ.தி.மு.க.,வுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கூடாது' என, சூரியமூர்த்தி என்பவர் அளித்த மனு தொடர்பாக, விளக்கம் கேட்டு, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமிக்கு, தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
திண்டுக்கல்லை சேர்ந்தவர் சூரியமூர்த்தி. இவர் அ.தி.மு.க.,வுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கூடாது என அளித்த மனு மீது, விசாரணை நடத்த தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுவில், 'அ.தி.மு.க.,வின் உள்கட்சி விவகாரம் தொடர்பாகவும், கட்சி சட்டதிட்டங்களுக்கு விரோதமாக செயல்பட்டது குறித்தும், தேர்தல் கமிஷனுக்கு 2017 முதல் 2022 வரை புகார்கள் அளித்துள்ளேன். உள்கட்சி விவகாரம் உள்ளிட்ட பிரச்னை தொடர்பாக தாக்கல் செய்திருக்கும், உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை, அ.தி.மு.க.,வுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது என, தேர்தல் கமிஷனுக்கு அளித்த மனுவுக்கும், எந்த பதிலும் அளிக்கவில்லை.
லோக்சபா தேர்தல் நெருங்குவதால், அ.தி.மு.க.,வுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது என்ற கோரிக்கையுடன் அளித்த மனு மீது விசாரணை நடத்த, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும்' என, தெரிவித்திருந்தார்.
இம்மனு மீதான விசாரணை வரும் 25ம் தேதி வர உள்ளது. இந்நிலையில், சூரியமூர்த்தி அளித்த மனு தொடர்பாக, பதில் அளிக்கும்படி, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமிக்கு, தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

