படம் வெளியீட்டுக்காக கைகட்டி காத்திருந்த பனையூர் பண்ணையார்; விஜய்யை சீண்டிய அதிமுக
படம் வெளியீட்டுக்காக கைகட்டி காத்திருந்த பனையூர் பண்ணையார்; விஜய்யை சீண்டிய அதிமுக
ADDED : ஜன 25, 2026 09:12 PM

சென்னை: தன் திரைப்படம் வெளியாக வேண்டுமென அன்றைய முதல்வர் வீட்டில் 5 மணி நேரம் கைகட்டி காத்திருந்தவர், பனையூர் பண்ணையார் என்று தவெக தலைவர் நடிகர் விஜய்யை அதிமுக சரமாரியாக விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.
மாமல்லபுரத்தில் தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய், திமுக, அதிமுக ஆகிய கட்சிகளை பெயர் குறிப்பிடாமல் ஆளும் கட்சி, ஆண்ட கட்சி என கூறி சரமாரியாக விமர்சனம் செய்தார். தீய சக்தி, ஊழல் சக்தி, அடிமை சக்தி, அண்ணா ஆரம்பித்த கட்சி என்று கடுமையான வார்த்தைகளினால் குற்றம்சாட்டி பேசினார்.
இந் நிலையில் விஜய்யின் பேச்சுக்கு அதிமுக தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பும், விமர்சனமும் எழுந்து இருக்கிறது. அக்கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளப பதிவில் விஜய்யை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது;
பனையூர் பண்ணையார் அவர்களே, ஊழல் என்பது சட்ட விரோதமாக பணம் சம்பாதிக்கும் செயல். அப்படிப் பார்த்தால், சட்டத்திற்கு விரோதமாக, தொடர்ந்து ப்ளாக்கில் டிக்கெட் விற்று அதன் மூலம் பல கோடிகள் கண்ட நடிகர் விஜய் நீங்கள் தான் ஆகப்பெரும் ஊழல்வாதி.
'மத்திய அரசிற்கு அடிமை' என்பது அதிமுகவின் வரலாற்றிலேயே இல்லாத ஒன்று. எப்போதெல்லாம் மாநில நலனுக்கும், உரிமைகளுக்கும் சோதனை வருகிறதோ, அப்போதெல்லாம் தமிழகத்திற்கான உரிமைகளை போராடி பெற்று , மக்களின் நலன்களை வாதாடி பெற்ற இயக்கம், எங்கள் அஇஅதிமுக என்னும் பேரியக்கம் என்பது தான் வரலாறு.
தன் திரைப்படம் வெளியாக வேண்டுமென அன்றைய முதல்வர் வீட்டில் 5 மணி நேரம் கைகட்டி காத்திருந்து, வெளியிட்ட படத்தின் பெயரை நாங்கள் சொல்லவா..? இல்லை எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவிய முதல்வர் பெயரை நீங்கள் சொல்லுகிறீர்களா?
ஊழல் என்பது வெறுமனே அரசியலில் பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல. தனக்கான வருமானத்தைப் பெருக்க அதிகார மையத்திடம் மண்டியிடுவதும் அதே வகை தான் பனையூர்காரரே. அதிமுகவின் ஆட்சியை ஊழல் ஆட்சி என்று குறை சொல்லிவிட்டு, அந்தாட்சியில் கல்வி அமைச்சராக இருந்த செங்கோட்டையனை ஒருங்கிணைப்பாளர் என்று பக்கத்திலேயே உட்கார வைத்து கொள்வது தான், நீங்கள் சொல்லுகின்ற தூயசக்திக்கான விளக்கவுரையா?
நீங்கள் செய்தீர்களோ? இல்லையோ? ஆனால் கருரில் 41 பேரின் மரணத்திற்கு நீங்களும் ஒரு காரணம் தானே, அதற்கான பிராயசித்தங்களை செய்யாமல், என்ன வழக்கு வரபோகிறதோ என்ற பயத்தில் 72 நாட்களுக்கும் மேல் பனையூரில் பதுங்கி , 15 நாட்கள் கட்சியின் அலுவலகத்தையே மூடி வைத்தீர்களை ? அதுதான் நீங்கள் எவ்வளவு பெரிய வீரர் என்பதற்கான விடை.
உலக வரலாற்றிலேயே முதன்முறையாக இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று ஆறுதல் சொல்லாமல், பனையூரில் வந்து ஆறுதல் வாங்கி செல்ல வைத்தது எல்லாம் வேற லெவல் பண்ணையார்தனம். இதற்காக உங்களுக்கு டாக்டர் பட்டமே கொடுக்கலாம். கரூர் சென்று கண்ணீரைத் துடைக்காமல் , கிளிசரின் கண்ணீரோடு , போட்டோக்களை வைத்து பேருக்கு ஒரு அஞ்சலி நிகழ்ச்சி நடத்திவிட்டு குற்ற உணர்வு சிறிது கூட இல்லாமல், அந்த நிகழ்ச்சியிலும் தன்னை சுய தம்பட்டம் செய்து கொண்டது மிகவும் ஆபத்தான அரசியலின் அடையாளம்.
அரசியலில் நல்லவர்களாக இருக்கலாம், வல்லவர்களாக இருக்கலாம் ஆனால் ஒன்றுமே தெரியாத-புரியாத, தனது ரசிகர்களை கூட ஏமாற்றும், இன்னும் டைரக்டர் நடிகராகவே இருக்கும் தவெக தலைவர் போன்றவராக மட்டும் இருந்து விட கூடாது. நீங்கள் அதிமுக குறித்து, மனனம் செய்து ஒப்புவிக்கும் ஒட்டுமொத்தக் கருத்துருவும் ஒன்றாம் நம்பர் குப்பையே. அறிவாலய குப்பையோடு, பனையூர் குப்பையையும் கூட்டி எறிந்திடுவோமாக.
இவ்வாறு அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

