வாலிபருக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு ஸ்கேன் சென்டருக்கு கோர்ட் உத்தரவு
வாலிபருக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு ஸ்கேன் சென்டருக்கு கோர்ட் உத்தரவு
ADDED : மார் 20, 2024 05:31 AM
கடலுார், :  உடற்பயிற்சி நிலைய உரிமையாளருக்கு. சென்னையை சேர்ந்த ஸ்கேன் சென்டர் ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க, நுகார்வோர் கோர்ட் உத்தரவிட்டது.
சென்னை புழுதிவாக்கத்தை சேர்ந்தவர் சுஜித், 32; உடற்பயிற்சி நிலைய உரிமையாளர். இவர், கடந்த 8.11.2020 அன்று சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டரில், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுக்க சென்றார். அங்கு, ஸ்கேன் இயந்திரம் இயக்கியபோது, சுஜித் உள்ளே சிக்கிக் கொண்டார்.
அவரை மீட்க பயன்படுத்திய கத்திரிக்கோல் சுஜித் நெற்றியில் பட்டு காயம் ஏற்பட்டது. ஸ்கேன் சென்டர் ஊழியர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, சிகிச்சை அளித்தனர். எம்.ஆர்.ஐ., ஸ்கேன் கட்டணத்தையும் திருப்பி கொடுத்தனர்.
ஆனால், ஸ்கேன் சென்டர் ஊழியர்களின் அஜாக்கிரதையால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடு கேட்டு கடலுார் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், சுஜித் வழக்கு தொடர்ந்தார்.
விசாரணை நடத்திய மாவட்ட நுகார்வோர் குறைதீர் ஆணைய தலைவர் கோபிநாத் மற்றும் உறுப்பினர்கள் பார்த்திபன், கலையரசி ஆகியோர்,  சேவை குறைபாடு மற்றும் சுஜித்திற்கு ஏற்பட்ட வலி, துன்பம், மனஉளைச்சலுக்கு ஸ்கேன் சென்டர் 1 லட்சம் ரூபாய் இழப்பீடு மற்றும் வழக்கு செலவு தொகையாக 5,000 ரூபாய் வழங்க உத்தரவிட்டனர்.

