காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்
காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்
ADDED : செப் 03, 2025 12:19 AM
சென்னை:'தமிழகம் முழுதும், 'இன்ப்ளூயன்ஸா' பாதிப்பு அதிகரித்து இருப்பதால், மக்கள் கூட்டம் மிகுந்த பகுதிகளுக்கு செல்லும்போது, முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்' என, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் காய்ச்சலுடன் சேர்ந்து, உடல் சோர்வு, வறட்டு இருமல், தொண்டை வலி, சளி பாதிப்புகள் காணப்படுகின்றன. காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகும் நபர்களில், இன்ப்ளூயன்சா வைரஸ் பாதிப்பு அதிகம் காணப்படுகிறது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கர்ப்பிணியர், இணை நோயாளிகள், முதியோர் ஆகியோர், முகக்கவசம் அணிய, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
இது குறித்து, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
பருவகால மாற்றம் காரணமாக, இன்ப்ளூயன்ஸா வைரஸ்களால் ஏற்படும் காய்ச்சல் பாதிப்புகள் அதிகம் காணப்படுகின்றன. காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால், அலட்சியம் காட்டக் கூடாது.
மருத்துவ சிகிச்சை தேவை. பொது இடங்களுக்கு செல்லும் கர்ப்பிணியர், குழந்தைகள், வயதானவர்கள், இணை நோய் பாதிப்பு உள்ளவர்கள், முகக் கவசம் அணிந்து செல்வது நல்லது. கட்டாயம் கிடையாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.