நம்பிக்கையில்லா தீர்மானம் அனுமதி மறுப்பால் அ.தி.மு.க., வெளிநடப்பு
நம்பிக்கையில்லா தீர்மானம் அனுமதி மறுப்பால் அ.தி.மு.க., வெளிநடப்பு
ADDED : ஏப் 17, 2025 01:17 AM

சென்னை:சட்டசபை நேற்று காலை, 9:30 மணிக்கு கூடியதும், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி எழுந்து, ''மூன்று அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர, கடிதம் கொடுக்கப்பட்டு உள்ளது. அதுகுறித்து விவாதிக்க வேண்டும்,'' என்றார்.
அதற்கு சபாநாயகர் அப்பாவு, ''எதிர்க்கட்சியினர் கொடுத்துள்ள நம்பிக்கையில்லா தீர்மான கடிதம் பரிசீலனையில் இருக்கிறது; அதை, இப்போது எடுத்துக் கொள்ள முடியாது,'' என்றார். அதை அனுமதிக்க வேண்டும் என, எதிர்க்கட்சியினர் கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது குறுக்கிட்ட அமைச்சர் துரைமுருகன், ''தீர்மானம் கொடுப்பதில் தவறில்லை. அதை எப்போது வேண்டுமானாலும், சபாநாயகர் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளலாம்,'' என்றார்.
இதையடுத்து பேசுவதற்கு அனுமதி கிடைக்காததால், பழனிசாமி உள்ளிட்ட அவரது கட்சி எம்.எல்.ஏ.,க்கள், சபாநாயகரை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.