தமிழக கவர்னருடன் அஜித் தோவல்... ஆலோசனை : உளவு தகவல்கள் குறித்து பேச்சு
தமிழக கவர்னருடன் அஜித் தோவல்... ஆலோசனை : உளவு தகவல்கள் குறித்து பேச்சு
UPDATED : செப் 01, 2024 02:26 AM
ADDED : ஆக 31, 2024 11:56 PM

சென்னை, செப். 1- சென்னை வந்துள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், நேற்று காலையில் கவர்னர் ரவியை சந்தித்து அரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார். நாட்டின் பாதுகாப்பு பிரச்னை தொடர்பான உளவு தகவல்கள் குறித்து, இருவரும் பேச்சு நடத்தியதாக தெரிகிறது.
அஜித் தோவல் கடந்த மாதம் 29ம் தேதி இலங்கை தலைநகர் கொழும்பு சென்றார். அங்கு, வரும் 21ல் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இந்த சூழலில் அங்கு நடந்த பாதுகாப்பு மாநாட்டில், தோவல் கலந்து கொண்டார்.
பின், அதிபர் ரணில் விக்ரமசிங்கேயை சந்தித்து, இரு நாட்டு உறவு குறித்து விவாதித்தார்.
இணைந்து பயிற்சி
சீனாவின் மூன்று போர் கப்பல்கள் கடந்த 26ம் தேதி இலங்கை சென்றன. அக்கப்பல்களுடன் இலங்கையின் விஜயபாகு என்ற போர் கப்பல் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டது.
அதேபோல், இந்தியாவின் ஐ.என்.எஸ்., மும்பை போர் கப்பலும் 26ம் தேதி கொழும்பு துறைமுகம் சென்றது. அக்கப்பலுடன் இலங்கையின் கஜபாகு போர் கப்பல் இணைந்து பயிற்சிகளில் ஈடுபட்டது.
இரு நாட்டு கப்பல்களும் ஒரே நேரத்தில் இலங்கை சென்றதும், பயிற்சியை முடித்து, 29ம் தேதி நாடு திரும்பியதும், பல கேள்விகளை எழுப்பியது. இப்பின்னணியில், அஜித் தோவல் அவசர பயணமாக இலங்கை சென்று திரும்பியுள்ளார்.
ஆய்வு
நேற்று காலையில் கவர்னர் ரவியுடன் அரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார்; மாலை 5:10 மணிக்கு டில்லி திரும்பினார்.
கவர்னருடன் நடந்த ஆலோசனையில், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்படுவது குறித்தும், வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் தமிழகத்தில் ஊடுருவுவது குறித்தும் விரிவாக பேசப்பட்டதாக தெரிகிறது.
சமீபத்தில் அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, 'வங்கதேசத்தில் இருந்து அசாம் வழியாக சட்ட விரோதமாக நம் நாட்டிற்குள் நுழையும் அகதிகள், தமிழகம் மற்றும் தென் மாநிலங்களில் குடியேறுகின்றனர்.
'இது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்' என, தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியதாக கூறியிருந்தார்.
ஆலோசனை
அந்த விவகாரம் குறித்தும், போதைப் பொருள் நடமாட்டம் குறித்தும், இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக, அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இதற்கு முன்னரும் சில முறை அஜித் தோவல் தமிழகம் வந்து, கவர்னரை சந்தித்து பேசினார். அப்போது கவர்னர் மாளிகை தரப்பில், எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. நேற்றைய சந்திப்பு புகைப்படம் மட்டும், அதிகார பூர்வமாக வெளியிடப்பட்டது
கவர்னர் மாளிகை சார்பில், 'எக்ஸ்' தளத்தில் வெளியிடப்பட்ட பதிவில், 'தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன், கவர்னர் ரவி, தேசிய பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகள் குறித்து, விரிவான மற்றும் பயனுள்ள ஆலோசனையை மேற்கொண்டார்' என குறிப்பிடப்பட்டுள்ளது.