வன்னியர் சங்கத்தை வசப்படுத்தும் முயற்சி தீவிரமாக களமிறங்கிய அன்புமணி
வன்னியர் சங்கத்தை வசப்படுத்தும் முயற்சி தீவிரமாக களமிறங்கிய அன்புமணி
ADDED : செப் 24, 2025 04:18 AM

சென்னை: பா.ம.க.,வில் அப்பா -- மகன் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, அன்புமணியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தார்.
ஆனால், பா.ம.க., தலைவராக, அன்புமணியை தேர்தல் கமிஷன் அங்கீகரித்துள்ளது. இதை எதிர்த்து, தலைமை தேர்தல் கமிஷனரிடம், ராமதாஸ் தரப்பு நிர்வாகிககள், நேரில் மனு அளித்துள்ளனர்.
பா.ம.க., தலைவர் என்ற அடிப்படையில், அன்புமணி தமிழகம் முழுதும் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். எனவே, வன்னியர் சங்கம் குறித்து கவலைப்படாமல் இருந்தார். ஆனால், வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி, ராமதாஸ் பக்கம் உள்ளார். அவரை தனக்கு ஆதரவாக திருப்ப, அன்புமணி எடுத்த முயற்சி பலன் அளிக்கவில்லை.
இந்நிலையில், வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி வெளியிட்ட அறிக்கையில், 'வன்னியர் சங்கத்திற்கு எதிராகவும், சங்கத்தின் நிறுவனர் ராமதாசுக்கு விரோதமாகவும், சங்க மாநிலச் செயலர்கள் வைத்தி, முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்தி ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர்.
'எனவே, அவர்கள் இருவரும், வன்னியர் சங்க பொறுப்புகளில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்படுகின்றனர்' என தெரிவித்துள்ளார்.
வைத்தியும், கார்த்தியும், அன்புமணியின் தீவிர ஆதரவாளர்கள். எனவே, அவர்கள் நீக்கப்பட்டதை, தனக்கு எதிரான நடவடிக்கையாக எடுத்துக் கொண்ட அன்புமணி, வன்னியர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலர்களில், தனக்கு ஆதரவாக உள்ளவர்களின் பட்டியலை தயாரிக்க உத்தரவிட்டுள்ளார்.
அவர்கள் உதவியுடன், வன்னியர் சங்கத்தை வசப்படுத்த திட்டமிட்டுள்ளார்.
இது தொடர்பாக அன்புமணி ஆதரவு வன்னியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
பா.ம.க.,வை போல, வன்னியர் சங்க நிர்வாகிகள், மாவட்டச் செயலர்களில் அன்புமணி ஆதரவாளர்களே அதிகம். ஆனாலும், பிரச்னை வேண்டாம் என அமைதியாக இருந்தார். இப்போது, அன்புமணியின் தீவிர ஆதரவாளர்களை வன்னியர் சங்கத்தில் இருந்து நீக்கியுள்ளனர்.
எனவே, வன்னியர் சங்க மாவட்டச் செயலர்கள், செயற்குழு கூட்டத்தை கூட்ட, நீக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். அவர்கள் அதற்கான முயற்சிகளில் இறங்கி உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.