ADDED : பிப் 16, 2024 02:20 AM

சென்னை:தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' நிகழ்ச்சி வட சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடந்தது.
தமிழக பா.ஜ. சார்பில் பெரம்பூர் அருகே அகரம் சந்திப்பில் நடந்த நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியதாவது:
ஜூலை 28ல் ராமேஸ்வரத்தில் துவக்கிய 'என் மண் என் மக்கள்' பயணத்தில் சில நாட்களுக்கு முன் 200வது தொகுதியாக சென்னை துறைமுகம் தொகுதிக்குவந்து சேர்ந்தோம். இன்னும் சில நாட்களில் 234 தொகுதிகளை முடித்து கடைசியாக பல்லடத்தில் யாத்திரை முடிவு அடைய உள்ளது.
மக்கள் நேர்மையான அரசியலை எதிர்பார்ப்பதை இந்த பயணத்தில் அறிந்தேன். சாமானிய மனிதனை மையப்படுத்திய ஆட்சியை எதிர்பார்க்கின்றனர். எந்தவித லஞ்சம் இல்லாமல் வரிப்பணத்தை அதை மக்கள் பயன்படும் வகையில் செலவிட வேண்டும் என நினைக்கின்றனர்.
தென்சென்னை எம்.பி.தமிழச்சி தங்கபாண்டியனின் சகோதரர் தமிழகத்தின் நிதியமைச்சராக உள்ளார். அவரது தந்தையும் அமைச்சராக இருந்தவர். மத்திய சென்னையிலும் அரசியல் வாரிசாகதயாநிதி எம்.பி.யாக உள்ளார். வட சென்னையில் ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி எம்.பி.யாக உள்ளார். இவர்கள் மூன்று பேருக்கும்சாமான்ய மனிதரின் வலி தெரியுமா? அரசியல் குடும்பத்தில் பிறந்து குடும்ப கோட்டாவில் எம்.பி.யானவர்களுக்கு சாமான்ய மக்கள் மீது எந்த அக்கறையும் இல்லை.
மத்திய அரசு கொட்டித் தருகிறது. ஆனால் மாநில அரசு அதை மக்களுக்கு கிள்ளித் தருகிறது. எந்த ஒரு முன்னேற்பாடும் இல்லாமல் கிளாம்பாக்கத்திற்கு பேருந்து முனையத்தை மாற்றி மக்களை அவதிக்கு உள்ளாக்கி உள்ளனர்.
மோடி ஆட்சிக்கு வந்த போது உலகின் 11வது பெரிய வளர்ந்த நாடாக இந்தியா இருந்தது.பத்து ஆண்டுகளில் உலகின்பெரிய பொருளாதாரநாடாக ஐந்தாவது இடத்திற்கு இந்தியா உயர்ந்துள்ளது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் 32 மாதத்தில் 2.69 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளனர். இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம் உள்ளது. முத்ரா திட்டத்தில் பல லட்சம் பேர் தமிழகத்தில்பயன் பெற்றுள்ளனர்.மோடி கையில் தமிழகத்தையும் சென்னையையும் ஒப்படைக்க வேண்டிய நேரமும் காலமும் வந்து விட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.