ADDED : செப் 22, 2025 03:36 AM
சென்னை: வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநருமான பால கவுதமனுக்கு, முன் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்தவர் பால கவுதமன்; வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநர். இவர், தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த உஸ்தாத் பீர் முகமது சதிக்கி, பயங்கரவாதத்தை துாண்டும் விதமாக பேசியது குறித்து, 'ஸ்ரீடிவி' வாயிலாக விளக்கம் அளித்தார். இதற்காக, பால கவுதமன் மீது, சென்னை மாநகர போலீசின் சைபர் குற்றப்பிரிவு, சமூக வலைதள கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அவருக்கு, 'சம்மன்' அனுப்பி விசாரித்து வாக்குமூலமும் பெற்றனர். அப்போது அவர் போலீசாரிடம், 'என் பேச்சில் எவ்வித உள் நோக்கமும் இல்லை. இந்திய இறையாண்மைக்கு எதிராக தேச விரோத செயலில் ஈடுபட முயற்சி செய்வோரின், முகத்திரையை கிழித்து வருகிறேன். உஸ்தாத் பீர் முகமது சதிக்கின் பேச்சில் இருக்கும் விஷமத்தனம் குறித்தும் விளக்கம் அளித்தேன்' என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில், தனக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இம்மனுவை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் விசாரித்து, பால கவுதமனுக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.