வாக்குவாதம் செய்த உதவி கமிஷனர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
வாக்குவாதம் செய்த உதவி கமிஷனர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
ADDED : செப் 03, 2025 06:31 AM

சென்னை : மேற்கு மண்டல இணை கமிஷனர் திஷா மிட்டலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கோயம்பேடு உதவி கமிஷனர் சரவணன், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, சென்னை போலீஸ் கமிஷனர் அருண் பிறப்பித்துள்ளார்.
நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்கும் விழாவை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளை, மேற்கு மண்டல இணை கமிஷனர் திஷா மிட்டல் மேற்கொண்டு வந்தார். அப்போது, கோயம்பேடு உதவி கமிஷனர் சரவணனுக்கு அளித்த உத்தரவை, அவர் பின்பற்றாதது குறித்து, இணை கமிஷனர் திஷா கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனால் கோபமடைந்த உதவி கமிஷனர் சரவணன், இணை கமிஷனர் திஷாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து, போலீஸ் கமிஷனர் அருணிடம் தகவல் தெரிவித்ததுடன், துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் திஷா பரிந்துரை செய்தார். அதன்படி, உதவி கமிஷனர் சரவணனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, கமிஷனர் அருண் உத்தரவு பிறப்பித்தார்.