ADDED : மே 22, 2025 01:35 AM
சென்னை:தமிழக பல்கலைகளுக்கு துணைவேந்தர் நியமிக்கும் அதிகாரத்தை, மாநில அரசுக்கு வழங்கும் சட்டத்துக்கு இடைக்கால தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக பல்கலைகளுக்கு துணைவேந்தர்கள் நியமிக்கும் அதிகாரத்தை, கவர்னரிடம் இருந்து, மாநில அரசுக்கு மாற்றம் செய்து, சட்டத்தில் திருத்தம் செய்து, 10 சட்ட மசோதாக்கள், சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன.
அவகாசம்
இதற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காததால், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்து உத்தரவிட்டது.
அதைத்தொடர்ந்து, துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் திருத்த சட்டம் அமலுக்கு வந்தது. இதை எதிர்த்து, திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாஜலபதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மனுவில், 'பல்கலை மானியக் குழு விதிகளுக்கு முரணாக, இந்த சட்டப் பிரிவுகள் உள்ளதால், இதை சட்ட விரோதமானது என அறிவிக்க வேண்டும். புதிய சட்ட திருத்தத்தின் அடிப்படையில், துணை வேந்தர்களை நியமிக்க தடை விதிக்க வேண்டும்' என கேட்டிருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமிநாராயணன் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ''அரசின் சட்டங்களுக்கு தடை கோரிய மனுவுக்கு பதில் அளிக்க, அரசு தரப்புக்கு அவகாசம் வழங்க வேண்டும். மொத்தமுள்ள 10 பல்கலைகளில் இரண்டுக்கு மட்டுமே, துணை வேந்தர் தேடுதல் குழு நியமிக்கப்பட்டுள்ளது. எனவே, தடை கோரிய வழக்கில் பதில் அளிக்க, அரசு தரப்புக்கு அவகாசம் வேண்டும்,'' என்றார்.
உயர் கல்வித் துறை தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, ''இந்த வழக்கை, உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி, மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
''இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க, எந்த அவசியமும் இல்லை. பா.ஜ.,வின் திருநெல்வேலி மாவட்ட செயலரான மனுதாரர், அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கை தாக்கல் செய்து உள்ளார்.
''பொதுநலன் இல்லை என்பதால், தடை கோரிய மனுக்களுக்கு பதில் அளிக்க, அவகாசம் தராமல் விசாரிப்பது முறையற்றது,'' என்றார்.
தமிழக அரசு, உயர் கல்வித் துறை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தும், மனுதாரர் தரப்பில் இடைக்கால தடை கோரிய மனு மீது வாதங்களை முன்வைக்க, நீதிபதிகள் அனுமதித்தனர்.
ஒப்புதல்
மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞரும், தெலுங்கானா உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியுமான தாமா சேஷாத்ரி நாயுடு, ''பல்கலைகளை அரசியல் சக்திகளிடம் இருந்து பாதுகாக்கவே, இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
''துணைவேந்தர் நியமிக்கும் நடைமுறை துவக்கப்பட்டுள்ளது. துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான, பல்கலை மானியக் குழு விதிமுறைகளுக்கு முரணாக சட்டம் இயற்றப்பட்டுஉள்ளது,'' என்றார்.
அதற்கு அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், ''தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, உச்ச நீதிமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, அமலுக்கு வந்துள்ளது. பல்கலை மானியக் குழு சட்டத்தில், சில அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. யூகத்தின் அடிப்படையில் சட்டங்களுக்கு தடை விதிக்க முடியாது,'' என்றார்.
மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் வாதாடியதாவது:
இந்த மனுவை விசாரித்தால், வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய மனு செல்லாததாகி விடும். முக்கிய ஆதாரங்கள் மறைக்கப்பட்டுள்ளன. தேடுதல் குழு நியமனத்தை எதிர்த்து, வழக்கு தாக்கல் செய்யவில்லை. துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை, வேந்தரிடம் இருந்து எடுத்து அரசுக்கு வழங்கியதை எதிர்த்து மட்டுமே வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
கவர்னரை, பல்கலை வேந்தர் என்ற நிலையில் இருந்து நீக்கவில்லை. துணை வேந்தர் நியமன அதிகாரம் மட்டுமே அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. மனுவுடன் தாக்கல் செய்யப்பட்ட அரசிதழ் தவறானது, ஜோடிக்கப்பட்டது; உண்மையானதல்ல. இது மனுதாரருக்கு எப்படி வந்தது என விசாரிக்க வேண்டும். அவசரமாக விசாரிக்க வேண்டும் என, எந்த காரணங்களும் மனுவில் தெரிவிக்கப்படவில்லை.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
பல்கலை மானியக் குழு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, ''தமிழக அரசு சட்டங்கள், பல்கலை மானியக் குழு விதிகளுக்கு முரணானவை,'' என்றார்.
அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், துணை வேந்தர்களை நியமிக்கும் வேந்தரின் அதிகாரத்தை அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டப் பிரிவுகளுக்கு, இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.