'சைபர் குற்றங்களை விசாரிக்க வங்கிகள் ஒத்துழைக்க மறுப்பு'
'சைபர் குற்றங்களை விசாரிக்க வங்கிகள் ஒத்துழைக்க மறுப்பு'
ADDED : டிச 27, 2024 01:50 AM
சென்னை:'சைபர்' குற்றவாளிகள் குறித்து துப்பு துலக்க, வங்கி அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்க மறுப்பதாக, மாநில சைபர் குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
'ஆன்லைன்'
அவர்கள் கூறியதாவது:
'ஆன்லைன்' வாயிலாக பணம் மோசடி செய்யப்பட்டால், புகார் அளித்த உடனேயே, பாதிக்கப்பட்ட நபரின் வங்கி கணக்கு முடக்கப்படுகிறது.
ஆனால், 'அந்த வங்கி கணக்கை முடக்க, எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் கேட்கக்கூடாது. விசாரணை அதிகாரியின் கடிதம் போதுமானது' என, பல முறை வங்கிகளுக்கு கடிதம் அனுப்பியும், அதை அலட்சியம் செய்கின்றனர்.
தற்போது, பண மோசடிகள் குறித்து உடனடியாக புகார்கள் வருகின்றன; இது பாராட்டத்தக்கது. ஆனால், இந்த பணத்தை மோசடி செய்த நபர்களின் வங்கி கணக்கை உடனடியாக எங்களால் முடக்க முடியவில்லை; சைபர் குற்றவாளிகள் குறித்து துப்பு துலக்கவும் முடியவில்லை.
அலட்சியம்
வங்கிகளில் உள்ள 'நோடல்' அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக, இத்தகைய நிலை ஏற்பட்டு வருகிறது. நோடல் அதிகாரிகள், அலுவலக நேரத்திற்கு பின் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளனர். வங்கிகளில் வாடிக்கையாளர் சேவை அதிகாரி மட்டுமே, எல்லா புகார்களையும் கவனிக்கிறார்.
சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்களை பதிவு செய்யவும், அது தொடர்பாக போலீசாருடன் இணைந்து பணியாற்றவும், வங்கிகள் தோறும் தனிப்பிரிவு துவங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம்.
இது தொடர்பாக, மத்திய நிதித் துறைக்கு கடிதம் எழுதியுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.