'அமரன்' படக்குழுவினருக்கு அச்சுறுத்தல் இரும்புக்கரத்தால் அடக்க பா.ஜ., வலியுறுத்தல்
'அமரன்' படக்குழுவினருக்கு அச்சுறுத்தல் இரும்புக்கரத்தால் அடக்க பா.ஜ., வலியுறுத்தல்
ADDED : நவ 08, 2024 08:13 PM
சென்னை:'அமரன் படக்குழுவிற்கு வரும் அச்சுறுத்தல்களை, தமிழக அரசு இரும்பக்கரம் கொண்டு அடக்க வேண்டும்; படக்குழுவினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்' என, தமிழக பா.ஜ., வலியுறுத்தி உள்ளது.
அதன் அறிக்கை:
சமீபத்தில், காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடி உயிர் நீத்த, தமிழகத்தை சேர்ந்த இந்திய ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில், 'அமரன்' திரைப்படம் வெளியாகி உள்ளது. இப்படம் தேசப்பற்றையும், ராணுவ வீரர்களின் தியாகத்தை பறைசாற்றும், ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட வரலாற்று கதை.
முதல்வர் ஸ்டாலின் உட்பட, உலகம் முழுதும் உள்ள அனைத்து தரப்பு மக்களும், இப்படத்தை பாராட்டி வருகின்றனர். இப்படத்தில் முஸ்லிம் மக்களை தவறாக சித்திரித்துள்ளதாக, அவதுாறுகளை பரப்பி, இப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி, முற்றுகை போராட்டத்தை, எஸ்.டி.பி.ஐ., அறிவித்துள்ளது.
இந்த வெறுப்பு அரசியலை கண்டிக்கிறோம். மிக அமைதியாகவும் கட்டுப்பாடோடும், தேசப்பற்றை பறைசாற்றும் விதமாக நடக்கும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பேரணி நடத்த , ஆயிரம் கேள்விகளால் துளைத்தெடுத்து, அனுமதி கொடுக்க மறுத்த தி.மு.க., அரசு, 'அமரன்' திரைப்படத்திற்கு எதிராக போராட்டம் செய்வதை வேடிக்கை பார்ப்பது, அதிர்ச்சி அளிக்கிறது.
மேலும், இப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர்கள் மற்றும் இப்படத்தில் பணியாற்றியவர்களை அச்சுறுத்தும் வகையில், சில அமைப்புகள் பேசி வருகின்றன. இந்நிலையில், அந்த கலைஞர்களின் பாதுகாப்பிற்கு, அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.