'புலி வருது' கதையாக தமிழகத்தில் தொழில் முதலீடு பா.ஜ., கிண்டல்
'புலி வருது' கதையாக தமிழகத்தில் தொழில் முதலீடு பா.ஜ., கிண்டல்
ADDED : நவ 17, 2025 01:20 AM
சென்னை: 'தமிழகத்தில், தென்கொரிய நிறுவனம் முதலீடு செய்யவிருந்த, 1,720 கோடி ரூபாயை கோட்டை விட்ட முதல்வர் ஸ்டாலின் செயலால், 20,000 நேரடி வேலை வாய்ப்புகள் பறிபோயுள்ளன' என, தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில், 1,720 கோடி ரூபாய் முதலீடு செய்யவிருந்த, தென்கொரிய நிறுவனமான 'ஹவாசங்', தற்போது, ஆந்திராவில் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
'தமிழகத்தை தலைகுனிய விட மாட்டேன்' என, வீண் பேச்சு பேசும் ஸ்டாலின் அவர்களே, உங்கள் விடியா அரசின் விளைவாகவே, தமிழக இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய, 20,000 நேரடி வேலை வாய்ப்புகள் பறிபோயுள்ளன.
'புலி வருது, புலி வருது' என்ற கதையாக, ஒவ்வொரு முறையும், முதலீடு வருகிறது என விளம்பரம் வெளியிடுவதும், பின் அந்த முதலீடு அண்டை மாநிலத்திற்குச் சென்று விட்டதாக செய்தி வருவதும் தொடர் கதையாகி வருகிறது.
முதலீட்டை ஈர்க்கிறேன் என வெளிநாடுகளுக்கு பயணம் செய்து விட்டு, வெறுங்கையுடன் திரும்புவது; தானாகக் கிடைத்த முதலீட்டையும், எந்தவொரு முயற்சியும் எடுக்காமல் கோட்டை விடுவது;
தமிழகத்தின் எதிர்காலத்தை சிதைப்பது என, மும்முரமாக இருக்கும் முதல்வர் ஸ்டாலின், 'தமிழகத்தை தலைநிமிரச் செய்வேன்' என கூறுவதை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

