தற்காலிக மின் ஊழியர்கள் பணியை 46 நாட்களுக்கு நீட்டித்தது வாரியம்
தற்காலிக மின் ஊழியர்கள் பணியை 46 நாட்களுக்கு நீட்டித்தது வாரியம்
ADDED : ஜூலை 18, 2026 06:05 AM

சென்னை : மின் வாரிய பிரிவு அலுவலக தற்காலிக பணியாளர்களுக்கான ஒப்பந்தம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், மேலும், 46 நாட்கள் அதாவது, ஆகஸ்ட், 31ம் தேதி வரை நீட்டித்து, வாரியம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக மின் வாரியம், 2,854 பிரிவு அலுவலகங்களுடன் செயல்படுகிறது. இவற்றின் வாயிலாகவே புதிய மின் இணைப்பு, மின் வினியோகம், மின்சாதன பழுது சரி செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஒரு அலுவலகத்தில் உதவி பொறியாளர் தலைமையில், போர்மேன், ஒயர்மேன், கள உதவியாளர்கள் உட்பட, 20 பணியாளர்கள் பணிபுரிய வேண்டும்.
உத்தரவு
ஆனால், 10 பேர் கூட இல்லாததால் பணியாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். சட்டசபை தேர்தலால், துணை மின் நிலையங்கள், மின் வினியோக சாதனங்களில், இந்தாண்டு பிப்ரவரி தொடக்கத்தில் இருந்து, மே இரண்டாவது வாரம் வரை பராமரிப்பு பணிகள் செய்யப்படவில்லை. இதனால், பல இடங்களில் மின் சாதனங்கள் பழுதாகி, மின் தடை ஏற்பட்டது.
இதை விரைவாக சரிசெய்ய பிரிவு அலுவலகங்களில், ஜூன், 2 முதல் இம்மாதம், 16ம் தேதி வரை தற்காலிக பணியாளர்களை நியமிக்க, மின் வாரியம் உத்தரவிட்டது. அதற்கு ஏற்ப பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.
தற்போது, கோடை காலம் வெயில் சுட்டெரித்து வருவதால், இரவில் மட்டுமின்றி பகலிலும் பல இடங்களில் மின் தடை ஏற்படுகிறது.
இதனால், மின் சாதன பழுதுகளை விரைவாக சரிசெய்ய, தற்காலிக பணியாளர்கள் நியமனம் செய்வதற்கான ஒப்பந்தம், நேற்று முன்தினத்துடன் முடிவடைந்த நிலையில், 46 நாட்கள் அதாவது வரும் ஆகஸ்ட், 31 வரை நீட்டித்து, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
ரூ.1,324 சம்பளம்
அதன்படி, சென்னையில் வியாசர்பாடி, எம்.கே.பி., நகர், கிருஷ்ணமூர்த்தி நகர், மாதவரம், செம்பியம், கொடுங்கையூர், காந்தி நகர், பெரம்பூர் கிழக்கு, வில்லிவாக்கம், அயனாவரம், சிட்கோ நகர், ராஜாஜி நகர் ஆகிய பிரிவு அலுவலகங்களில் தலா, 30 பணியாளர்கள் நியமிக்கப்படுவர் .
சென்னை மற்றும் காஞ்சிபுரம் மண்டலங்களில் ஒரு அலுவலகத்திற்கு, 10 பேரும், மற்ற மண்டலங்களின் அலுவலகங்களில் தலா ஆறு பேர் என, அனைத்து பிரிவு அலுவலகங்களிலும், 18,838 பேர் நியமிக்கப்பட உள்ளனர். ஒருவருக்கு தினசரி, 1,324 ரூபாய் சம்பளம் வழங்கப்படும்.
