பழநி முருகன் கோயிலில் வெடிகுண்டு போலி புகார்: சாப்ட்வேர் இன்ஜினியர் கைது
பழநி முருகன் கோயிலில் வெடிகுண்டு போலி புகார்: சாப்ட்வேர் இன்ஜினியர் கைது
UPDATED : மார் 25, 2024 07:10 PM
ADDED : மார் 25, 2024 06:51 PM

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில்,திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்,காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள புகழ்பெற்ற கோயில்களில் வெடிகுண்டு இருப்பதாக போலியான புகாரை அந்தந்த போலீஸ் ஸ்டேஷன்களுக்கு இமெயிலில் அனுப்பிய கேரளா சாப்ட்வேர் இன்ஜினியரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில்,திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்,காஞ்சிபுரத்தில் உள்ள புகழ்பெற்ற கோயில்களில் தற்போது அதிகளவில் பக்தர்கள் குவிகின்றனர். அவர்களை அச்சுறுத்தம் விதமாக இக்கோயில்களில் வெடிகுண்டு இருப்பதாக அந்தந்த பகுதிகளில் செயல்படும் எஸ்.பி.,அலுவலகம், டி.ஜி.பி.,அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன்களுக்கு இமெயிலில் புகார் ஒன்று வந்தது.
முதல்கட்டமாக இதை உண்மை என நம்பிய திண்டுக்கல் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார்,மோப்ப நாய் பிரிவு போலீசார் பழநி முருகன் கோயில்,ரயில்வே ஸ்டேஷன்களில் தீவிரமாக சோதனை நடத்தினர். சோதனை முடிவில் எந்த இடத்திலும் வெடிகுண்டு இல்லையென உறுதியானது. போலீயான புகார் எனவும் போலீசாருக்கு தெரிந்தது. இதையடுத்து எஸ்.பி.,பிரதீப் போலீயான இமெயில் அனுப்பியது யார் என கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்படி இமெயில் வந்த ஐ.பி.,முகவரியை வைத்து போலீசார் விசாரணையை துவக்கினர். விசாரணையில் சென்னையில் குடும்பத்தோடு சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்க்கும் கேரளா எர்ணாகுளத்தை சேர்ந்த முருகேஷ்45,என்பது தெரிந்தது. இவர் இதேபோல் கேரளாவிலும் பல்வேறு போலியான மிரட்டல் புகார்களை அனுப்பியதும் தெரிந்தது. முருகேஷ்,தன் சொந்த ஊரான கேரளா எர்ணாகுளத்தில் பதுங்கியிருந்தபோது திண்டுக்கல் போலீசார் அவரை கைது செய்தனர்.

