விராலிமலை கோவிலில் சிலைகள் உடைப்பு; பக்தர்கள் அதிர்ச்சி
விராலிமலை கோவிலில் சிலைகள் உடைப்பு; பக்தர்கள் அதிர்ச்சி
ADDED : செப் 21, 2024 08:04 AM

புதுக்கோட்டை: விராலிமலை கோவில் அடிவாரத்தில் சுவாமி சிலைகள் தொடர்ந்து உடைக்கப்படுவது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை முருகன் கோவில் அடிவாரத்தில் 20க்கும் மேற்பட்ட சாமி சிலைகள் உடைக்கப்பட்டுள்ளது. இது அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை சமூகவலைதளத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பகிர்ந்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
விராலிமலை சுப்ரமணியசுவாமி திருக்கோவில் மலைப்பாதையில் சுவாமி சிலைகள் உடைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் இதயத்தை நொறுங்கச் செய்கிறது. கடும் கண்டனத்துக்குரிய இழிவான இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி கடும் நடவடிக்கையை எடுத்திட வேண்டும்.
விராலிமலை முருகனை தரிசிக்க தமிழ்நாடு முழுவதுமிருந்து வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக, மலையேற சிரமப்படும் பக்தர்கள் கவலைபோக்கிட அ.தி.மு.க., ஆட்சியில் சுவாமி சிலைகளுடன் விசாலமான மலைப்பாதை அமைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 3 வருடங்களில் மட்டும் மூன்று முறை இது போன்ற விரும்பத்தகாத செயல்கள் நடைபெற்று பக்தர்களை அச்சம் கொள்ள செய்திருக்கிறது.
சிரமேற்கொண்டு அமைக்கப்பட்ட மலைப்பாதையை தமிழக அரசு முறையாக பாதுகாக்க தவறியது கவலையளிக்கிறது. இனியாவது, இதுபோன்ற சம்பவம் நிகழாத வகையில் பாதுகாப்பை பலப்படுத்தி, கோவிலைச் சுற்றி ரோந்து பணிகளை போலீசார் துரிதப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.