ADDED : பிப் 12, 2025 12:34 AM
சென்னை,:போக்குவரத்து ஊழியர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தத்தில், 25 முதல், 30 சதவீதம் வரை உயர்வு கேட்க, தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு, புதிய ஊதிய ஒப்பந்தம் செய்வதற்கான பேச்சு, சென்னை குரோம்பேட்டையில் நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது. அமைச்சர் தலைமையில் நடக்கும் பேச்சில், அதிகாரிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
இதுகுறித்து, போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
போக்குவரத்து ஊழியர்களுக்கு, 25 முதல் 30 சதவீதம் ஊதிய உயர்வு கேட்க முடிவு செய்துள்ளோம். ஓய்வூதியர்களுக்கான பணப்பலன்கள், அகவிலைப்படி உயர்வு நிலுவை ஆகியவற்றை வழங்க வலியுறுத்துவோம். சேவை நோக்கத்தோடு செயல்படும் அரசு போக்குவரத்து கழகங்களின் நஷ்டத்தை, அரசே ஏற்க வேண்டும் என்றும் கேட்க உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.