சீருடை பணியாளர் வாரிய தலைவர் நியமனத்தை எதிர்த்து வழக்கு
சீருடை பணியாளர் வாரிய தலைவர் நியமனத்தை எதிர்த்து வழக்கு
ADDED : அக் 19, 2024 03:13 AM
சென்னை:தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவராக, ஓய்வுபெற்ற டி.ஜி.பி., சுனில்குமார் நியமிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு மாநில செயலர் ஐ.எஸ்.இன்பதுரை தாக்கல் செய்த மனுவில், 'சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக, ஓய்வுபெற்ற டி.ஜி.பி., சுனில்குமார் நியமிக்கப்பட்டு உள்ளார். இதில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. சுனில்குமார் நியமிக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும். அவரை நியமித்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் ஆஜராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மனுவுக்கு பதில் அளிக்க, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு, விசாரணையை அக்., 25க்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.