ADDED : செப் 23, 2025 06:47 AM

சென்னை; 'மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் விற்கப்பட்ட மருந்துகளில், 94 வகையான மருந்துகள் தரமற்றவையாக இருந்தது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது' என, மத்திய அரசின் மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
நாட்டில் விற்கப்படும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகள், மத்திய மற்றும் மாநில அரசுகளின் மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியங்கள் வாயிலாக ஆய்வு செய்யப்படுகின்றன.
அதேபோல, போலி மருந்துகள் கண்டறியப்பட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கடந்த மாதம், 1,000க்கும் அதிகமான மருந்து மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டன.
அவற்றில் காய்ச்சல், சளித்தொற்று, கிருமி தொற்று, ஜீரண மண்டல பாதிப்பு உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்படும், 94 மருந்துகள் தரமற்றவையாகவும், மூன்று மருந்துகள் போலியானதாகவும் இருந்தது கண்டறியப் பட்டன.
அதன் விபரங்கள், மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியத்தின், cdsco.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.
இந்த விபரங்களை, மக்கள் அறிந்து கொண்டு விழிப்புணர்வுடன் செயல்படலாம் என, மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.