தனியாருடன் இணைந்து செயல்படுத்தினால் எண்ணுார் மின் திட்டத்திற்கு நிலக்கரி இல்லை மத்திய அரசு கைவிரிப்பு
தனியாருடன் இணைந்து செயல்படுத்தினால் எண்ணுார் மின் திட்டத்திற்கு நிலக்கரி இல்லை மத்திய அரசு கைவிரிப்பு
ADDED : மே 04, 2025 12:13 AM
சென்னை:திருவள்ளூர் மாவட்டம் எண்ணுார் அருகே தலா, 660 மெகாவாட் திறனில், எண்ணுார் விரிவாக்க அனல் மின் நிலையத்தை, மின்வாரியம் அமைக்கிறது.
இதனுடன், எண்ணுார் சிறப்பு, 1,320 மெகாவாட், துாத்துக்குடி மாவட்டம் உடன்குடி, 1,320 மெகா வாட் திறன் உடைய அனல் மின் திட்டங்களுக்கு, பொதுத்துறையை சேர்ந்த, 'மகாநதி, சிங்கரேணி' நிறுவனங்களிடம் இருந்து நிலக்கரி பெற, மத்திய நிலக்கரி அமைச்சகம் பரிந்துரை செய்திருந்தது.
எண்ணுார் விரிவாக்க மின் நிலைய கட்டுமான பணியை, 'லேன்கோ' என்ற தனியார் ஒப்பந்த நிறுவனம் வாயிலாக, 2014ல் மின்வாரியம் துவக்கியது. அந்நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியதால், 2018ல் பணிகள் முடங்கின.
பின், 4,442 கோடி ரூபாயில் மீதமுள்ள பணிகளை தொடர, பி.ஜி.ஆர்., என்ற தனியார் நிறுவனத்திற்கு, 2022ல் ஆணை வழங்கப்பட்டது. அந்நிறுவனமும் பணிகளை துவக்காததால், ஒப்பந்த ஆணை ரத்து செய்யப்பட்டது.
தற்போது, பொது - தனியார் கூட்டு முயற்சியின் கீழ், எண்ணுார் விரிவாக்க மின் திட்டப்பணிகளை தொடர, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பொது - தனியார் முறையில் மின் திட்டத்தை செயல்படுத்தும்போது, நிலக்கரி ஒப்பந்தத்தில் கட்டுப்பாடுகள் உள்ளன. பொது - தனியார் அல்லது தனியார் நிறுவனங்களால் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு, நிலக்கரி ஒதுக்கப்படாது என, நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எனவே, எண்ணுார் விரிவாக்க மின் திட்டத்தை, மத்திய, மாநில அரசு நிறுவனங்களின் கூட்டு முயற்சியின் கீழ் செயல்படுத்தினால் மட்டுமே, நிலக்கரி ஒதுக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதனால், இத்திட்டத்தை மின்வாரியமே நேரடியாக செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மின்வாரியத்திற்கு என்று, ஒடிஷாவில் சகிகோபால் நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. எனவே, நிலக்கரி பெறுவதில் சிக்கல் ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.