கோவைக்கு இடம் மாறும் சென்னை ஐ.டி., நிறுவனங்கள் வெள்ள பாதிப்பே காரணம் என்கிறது அ.தி.மு.க.,
கோவைக்கு இடம் மாறும் சென்னை ஐ.டி., நிறுவனங்கள் வெள்ள பாதிப்பே காரணம் என்கிறது அ.தி.மு.க.,
ADDED : பிப் 16, 2024 12:43 AM
சென்னை:''சென்னையில் வரும் 23, 24ம் தேதிகளில், சர்வதேச தகவல் தொழில்நுட்ப கருத்தரங்கு நடத்தப்பட உள்ளது,'' என, அமைச்சர் தியாகராஜன் தெரிவித்தார்.
சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - ஏ.கே.செல்வராஜ்: மேட்டுப்பாளையம் அருகே, காரமடை நகராட்சி பகுதியில், தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க வேண்டும்.
தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் கூறியதுபோல், 'டைடல், எல்காட்' வழியாக, பின்தங்கிய பகுதிகளில், தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும்.
107 கோடி ரூபாய்
சென்னையில் பருவ மழையின்போது கடும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, சென்னையில் உள்ள ஐ.டி., எனும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், கோவைக்கு மாறி வருகின்றன. கோவை விமான நிலையம் விரிவாக்கப் பணி தாமதமாவதால், பன்னாட்டு நிறுவனங்கள் வருவது தாமதமாகிறது.
எனவே, விமான நிலையம் விரிவாக்கப் பணியை விரைவுபடுத்த வேண்டும். கோவைக்கு வர விரும்பும் ஐ.டி., நிறுவனங்களுக்கு, எல்காட் சார்பில் புதிய கட்டடம் கட்டப்பட வேண்டும். சிறப்பு பொருளாதார மண்டலத்தில், கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி தர வேண்டும்.
அமைச்சர் தியாகராஜன்: கோவை மாவட்டம், விளாங்குறிச்சியில், 107 கோடி ரூபாய் முதலீட்டில், சிறப்பு பொருளாதார மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளது. இது, காரமடை நகராட்சியில் இருந்து, 24 கி.மீ., தொலைவில் உள்ளது. இங்கு அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் உள்ளன.
குத்தகை அடிப்படையில், 'விப்ரோ, டைடல் பார்க் கோவை' நிறுவனங்களுக்கு, இடம் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிறுவனங்கள், 23 லட்சம் சதுர அடி பரப்பளவில், தகவல் தொழில்நுட்ப கட்டடத்தை கட்டி முடித்து, 16,809 பணியாளர்களுடன் இயங்கி வருகின்றன.
மேலும், ஐ.டி., நிறுவனங்களின் இடத்தேவையை பூர்த்தி செய்ய, 2.66 லட்சம் சதுர அடி பரப்பளவில், 114.16 கோடி ரூபாயில், கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன.
எனவே, காரமடை சிறிய நகரமாக இருப்பதால், தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க வேண்டிய தேவை எதுவும் இல்லை.
'நம்பர் 1' துறை
தேர்தல் அறிக்கையை தாண்டி, இரண்டாம் கட்ட நகரங்களில், முடிந்த அளவு, தகவல் தொழில்நுட்ப பூங்கா துவங்க உள்ளோம். இன்று, வேலைவாய்ப்பு உருவாக்கும் 'நம்பர் 1' துறையாக, தகவல் தொழில்நுட்பத் துறை உள்ளது.
உற்பத்தி துறையில், நிலம் ஒதுக்கீடு, கட்டுமானப் பணிகள் முடிக்க, இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளாகும். தகவல் தொழில்நுட்பத் துறையில், கட்டடம், இன்டர்நெட் இணைப்பு இருந்தால், வேலைவாய்ப்பு உருவாகும்.
எனவே, இத்துறைக்கு முதல்வர் முக்கியத்துவம் அளித்து வருகிறார். சென்னையில் கடந்த ஆண்டு சாதனையாக, 1.10 கோடி சதுர அடி கட்டடங்களில், புதிதாக ஐ.டி., அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
'எல்காட்' நிறுவனம் சார்பில், அ.தி.மு.க., ஆட்சியில், திருச்சி, மதுரை, கோவையில் மூன்று அலுவலக கட்டடங்களை துவக்கினர்.
சென்னை, கோவைக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறாதததால், பணி முடிந்தும், வழக்கு காரணமாக, திறக்க முடியாத நிலை உள்ளது; திறக்க நீதிமன்றத்தில் போராடி வருகிறோம்.
கோவையில் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. கட்டடத்திற்கு தேவை அதிகம் உள்ளது. கட்டடம் கட்டப்பட்டும் திறக்க முடியாமல் தவிக்கிறோம். கோவையில் உள்ள கட்டடத்தை திறந்தால், அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும்.
தொழில்நுட்ப கருத்தரங்கு
இந்தியாவில் உருவாகும் பொறியாளர்களில், 17 சதவீதம் பேர், ஆண்டுதோறும் தமிழகத்தில் தயாராகின்றனர். இதனால், அதிக நிறுவனங்கள் தமிழகம் வருகின்றன. அவர்களை ஈர்ப்பது எங்கள் இலக்கு.
அதற்காக, சென்னையில் வரும் 23, 24ம் தேதி சர்வதேச தொழில்நுட்ப கருத்தரங்கு நடத்த உள்ளோம்.
அனைத்து நாடுகளுக்கும் சென்று, தமிழகத்தில் முதலீடு செய்ய, ஐ.டி., நிறுவனங்களை அழைக்க உள்ளோம். கடந்த ஆண்டு சாதனையை, இந்த ஆண்டு மிஞ்ச பணியாற்றி வருகிறோம்.
இவ்வாறு விவாதம் நடந்தது.