ஆணவ படுகொலையை தடுக்க ஆணையம்: பட்டியலின அமைப்புகள் அதிருப்தி
ஆணவ படுகொலையை தடுக்க ஆணையம்: பட்டியலின அமைப்புகள் அதிருப்தி
ADDED : அக் 23, 2025 01:50 AM
சென்னை: 'ஓய்வு பெற்ற நீதிபதி பாஷா தலைமையிலான ஆணையத்தை உடனடி யாக கலைத்துவிட்டு, ஆணவ படுகொலை தடுப்பு சட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் இயற்ற வேண்டும்' என, பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.
அதன் விபரம்:
அம்பேத்கர் மக்கள் கழகத் தலைவர் இளையபாபு: தமிழகத்தில் கலப்பு திருமணம் செய்யும் காதல் ஜோடிகளை, ஜாதி காரணமாக பெற்றோர் ஆணவ படுகொலை செய்வது, கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்துள்ளது.
கடந்த 2013ல், தர்மபுரியில் நடந்த இளவரசன் ஆணவ படுகொலைக்கு பின், ஜாதி அடிப்படையிலான ஆணவ படுகொலைகள், மாநிலம் முழுதும் கணிசமாக உயர்ந்துள்ளன.
இதை தடுக்க, ஆணவ படுகொலை தடுப்பு சட்டம் இயற்ற கோரி, பலர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அரசு சட்டம் இயற்றாமல், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்திருப்பது, வேதனையாக உள்ளது. முதல்வர் உடனடியாக ஆணையத்தை கலைத்து விட்டு, ஆணவ படுகொலை தடுப்பு சட்டத்தை இயற்ற வேண்டும்.
தலித் விடுதலை இயக்கத் தலைவர் கருப்பையா: ஆணையம் அமைத்தது வரவேற்கத்தக்கதுதான். ஆனால், ஆட்சி காலத்தின் கடைசியில் அமைத்ததை ஏற்க முடியாது. எனவே, ஆணையத்தை கலைத்துவிட்டு, நேரடியாக ஆணவப் படுகொலை தடுப்பு சட்டத்தை இயற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.