மெத்தனால் உற்பத்தி விற்பனையை முறைப்படுத்த மாவட்ட அளவில் குழு
மெத்தனால் உற்பத்தி விற்பனையை முறைப்படுத்த மாவட்ட அளவில் குழு
ADDED : நவ 14, 2024 04:19 AM
சென்னை: தமிழகம் முழுதும், மெத்தனால் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றை முறைப்படுத்தவும், தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும், அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில், அரசு குழு அமைத்துள்ளது.
அரசு செய்திக்குறிப்பு:
மெத்தனால் மற்றும் 'சால்வன்ட்ஸ்' எனப்படும் இதர கரைப்பான்கள் ஆகியவற்றின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றை முறைப்படுத்த, தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், அந்தந்த மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த குழுவில், அந்தந்த மாவட்ட வருவாய் அலுவலர் தலைவராகவும், ஆயத்தீர்வை துணை ஆணையர், உதவி ஆணையர், மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் கூடுதல் எஸ்.பி., - டி.எஸ்.பி., மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர் ஆகியோர் உறுப்பினர்களாகவும் உள்ளனர்.
இக்குழுவானது, அந்தந்த மாவட்டங்களில் உள்ள, தமிழக இயல்பு மாற்றப்பட்ட சாராவி, மெத்தில் ஆல்கஹால், வார்னிஷ் விதிகளின் கீழ், அனைத்து வகையான கரைப்பான்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், கொள்முதல் மற்றும் விற்பனை நிறுவனங்கள், ரசாயனங்கள் பாதுகாத்து வைக்கப்படும் கிடங்குகள் மற்றும் பயன்படுத்தப்படும் ஆலைகளில் ஆய்வு செய்யும்.
மெத்தனால், கரைப்பான்களின் பரிமாற்றம், சேமிப்பு, பயன்பாடு, போக்குவரத்து தொடர்பான பதிவுகளை ஆய்வு செய்து சரிபார்க்கும். மேலும், மாவட்டங்களில் உள்ள, அனைத்து சோதனை சாவடிகளிலும் ஆய்வு செய்யும்.
சட்ட விரோத நடவடிக்கைகள் குறித்து, எந்த தகவல் கிடைக்க பெற்றாலும், எந்த ஒரு வளாகத்தையும், குழு அதிரடியாக சோதனை செய்து. தகவலின் உண்மைத்தன்மை குறித்து சரிபார்த்து, தக்க நடவடிக்கை எடுக்கும்.
மேலும், மெத்தனால், கரைப்பான்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், குழு உறுப்பினர்களால் சோதனை செய்யப்படும். மாவட்ட அளவிலான குழுக்களின் செயல்பாடுகள் அனைத்தும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையரால் கண்காணிக்கப்படுகிறது.
மாவட்ட கூட்டுக்குழு நடவடிக்கை வாயிலாக, தமிழகத்தில் மெத்தனால், கரைப்பான்களின் பயன்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
மேலும், விதிமுறைகளை மீறி சட்ட விரோதமாக செயல்படும் நிறுவனங்களின் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விதிகளை பின்பற்றி முறையாக செயல்படும் நிறுவனங்கள், எவ்வித இடையூறும் இன்றி செயல்படுவது உறுதி செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

