ADDED : நவ 23, 2024 02:52 AM
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர் விவேகானந்தன், கடந்த 2020 நவ., 22ல் கொரோனா காரணமாக உயிரிழந்தார். இதுவரை அவரது குடும்பத்திற்கு, தமிழக அரசு சார்பில் இழப்பீடோ, கருணை வேலையோ வழங்கப்படவில்லை. மத்திய அரசு சார்பில், 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர் பணியில் இருக்கும்போது இறந்தால், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் என்பது விதி. அதன்படி, அரசு வேலை கேட்டு, விவேகானந்தன் மனைவி விண்ணப்பித்துள்ளார். அவர் இன்ஜினியரிங் பட்டதாரி. தன் தகுதிக்கேற்ப வேலை கொடுத்தால் ஏற்கத் தயார் என்றும் கூறியுள்ளார். இதுவரை, அரசு வேலை வழங்கவில்லை என, டாக்டர்களுக்கான சட்டக் குழு தெரிவித்துள்ளது.
எனவே, விவேகானந்தன் குடும்பத்திற்கு, 25 லட்சம் ரூபாய் இழப்பீடு, அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மேலும், மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள், செவிலியர்கள், காவலர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கும் உரிய இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்க, முதல்வர் உத்தரவிட வேண்டும்.
- பன்னீர்செல்வம்
முன்னாள் முதல்வர்