கலவரத்தை துாண்டும் 'பிபிசி'; டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார்
கலவரத்தை துாண்டும் 'பிபிசி'; டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார்
UPDATED : அக் 29, 2025 07:00 AM
ADDED : அக் 29, 2025 06:33 AM

சென்னை: பி.பி.சி., நிறுவனம் மீது, தமிழக பா.ஜ., வழக்கறிஞர் பிரிவு சார்பில், அதன் மாநிலத் தலைவர் குமரகுரு டி.ஜி.பி., அலுவலகத்தில் அளித்த புகார்:
அக்., 23ம் தேதி, பி.பி.சி., தமிழ் வலைதளத்தில், மற்ற நாடுகளில் நிலவும், அசாதாரண சூழ்நிலையை பயன்படுத்தி, அரசையே மாற்றி அமைக்கும், 'ஜென் இசட்' என்ற இளைய சமூகத்தினர் ஏன், இந்தியாவின் வீதிகளில் இறங்கி போராடவில்லை என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகி உள்ளது.
இக்கட்டுரை வாயிலாக, அமைதியான சூழ்நிலை நிலவும் நம் நாட்டில், சட்டம் - ஒழுங்கு சீர்குலைவை ஏற்படுத்த, பி.பி.சி., நிறுவனம் முயற்சிக்கிறது. எனவே, பி.பி.சி., நிறுவனத்தின் மீது, உடனடியாக குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தியாவின் சீரான வளர்ச்சி மற்றும் அமைதி யான சூழ்நிலையை விரும்பாத, வெளிநாட்டு சதியால், பி.பி.சி., போன்ற நிறுவனங்கள் வாயிலாக, இது போன்ற தேவையற்ற மற்றும் இளைஞர்களை தவறான முறையில் துாண்டி விடும் செய்திகள் பரப்பப்படுகின்றன.
இது மிகவும் ஆபத்தானது. பி.பி.சி., நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் அதன் நிர்வாகிகளின் நடவடிக்கைகளை கண்காணித்து, குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

