ADDED : ஜன 07, 2025 06:45 AM

சென்னை: தமிழக சட்டசபையில் முதலிலேயே தேசிய கீதம் பாடவில்லை என்ற காரணத்தைக் கூறி, கவர்னர் தன் உரையை படிக்க மறுத்து சபையை விட்டு வெளியேறிச் சென்றார்.
இது மரபு மீறிய செயல் என்று ஆளுங்கட்சியினர், கவர்னர் ரவியின் செயல்பாடுகளை விமர்சித்துக் கொண்டுள்ளனர்.
அதேநேரம், அரசியலமைப்பு சட்டப்படி சபை நடக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த கவர்னர் கோரிக்கை ஏற்கப்படாததாலேயே, உரையை படிக்க மறுத்து சபையில் இருந்து கவர்னர் வெளியேறினார் என, கவர்னர் அலுவலக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
இந்நிலையில், சபை நடவடிக்கைகள் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்துகளை பகிர்ந்து உள்ளனர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: தமிழக மக்களுக்கு எதிராகவும், அரசியலமைப்பு சட்ட அதிகாரங்களை மீறுகிற வகையிலும் தொடர்ந்து செயல்படுவதை, கவர்னர் ரவி வழக்கமாக கொண்டிருக்கிறார்.
சட்டசபை மரபின்படி, கவர்னர் உரைக்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதும், இறுதியில் தேசிய கீதம் பாடுவதும் நடைமுறை. அதை மீறும் வகையில் கவர்னர் ரவியின் நடவடிக்கை அமைந்திருப்பது, சட்டசபையை அவமதிக்கும் செயல்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: சட்டசபை மரபை கவர்னர் ரவி அவமதித்திருப்பது, கண்டனத்துக்குரியது.
ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: தேசிய கீதம் பாடவில்லை எனக் கூறி கவர்னர் வெளியேறி இருப்பது, ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று என்பது தெளிவாகத் தெரிகிறது.
சபாநாயகர், சபை மரபு குறித்து கவர்னருக்கு கடந்தாண்டே தெரிவித்திருக்கிறார். ஆனால், கவர்னர் ரவி, தமிழக அரசு தயாரித்துள்ள உரையை வாசிக்காமலேயே வெளியேற வேண்டும் என, முன்கூட்டியே முடிவு செய்து, அதை நிறைவேற்றி காட்டியிருக்கிறார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் பெ.சண்முகம்: மரபுகளை மதிக்காமல், மத்திய அரசு விரும்புகிறபடி நடந்து கொள்வதை, கவர்னர் ரவி வழக்கமாக கொண்டுஉள்ளார். அவர் பதவி விலக வேண்டும்.
அந்த முடிவை அவர் எடுக்காவிட்டால், மத்திய அரசு அவரை உடனே திரும்ப பெற வேண்டும்.
த.வெ.க., தலைவர் விஜய்: மத்திய அரசால் நியமிக்கப்படும் கவர்னர் யாராக இருந்தாலும், தமிழக சட்டசபை மரபை காக்கும் நடவடிக்கைகளை பின்பற்றியே ஆக வேண்டும்.
ஒவ்வொரு முறை சட்டசபை கூடும்போதும், மரபு சார்ந்த செயல்பாடுகளில் கவர்னருக்கும், அரசுக்கும் இடையே மோதல் போக்கு உருவாவது தொடர் கதையாகி வருகிறது. இது, ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. இந்த போக்கு கைவிடப்பட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.