பரந்துார் விமான நிலைய திட்டம் சுற்றுச்சூழல் அனுமதி விண்ணப்பத்தில் சர்ச்சை!
பரந்துார் விமான நிலைய திட்டம் சுற்றுச்சூழல் அனுமதி விண்ணப்பத்தில் சர்ச்சை!
ADDED : மார் 05, 2024 11:37 PM
சென்னை:பரந்துார் விமான நிலைய திட்டத்திற்கு, மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் அளித்த விண்ணப்பத்தை திரும்பப் பெற, 'டிட்கோ' கேட்டிருப்பதாக தகவல் வெளியானது; அதை, டிட்கோ மறுத்துவிட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்துாரை சுற்றிய, 20 கிராமங்களில், 5,700 ஏக்கரில், சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைய உள்ளது.
முதற்கட்டமாக, பொடவூர் கிராமத்தில், நில எடுப்புக்கான அறிவிப்பை தொழில்துறை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அதை எதிர்த்து கிராமத்தினர் போராடி வருகின்றனர்.
பரந்துார் விமான நிலையத்திற்கு அனுமதி கேட்டு, தமிழக அரசின், 'டிட்கோ' எனப்படும், தொழில் வளர்ச்சி நிறுவனம் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்தது.
இந்நிலையில், டிட்கோ நிறுவனம், மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் விண்ணப்பத்தை திரும்பப் பெற அனுமதி கேட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வியிடம் கேட்ட போது, ''விமான நிலைய திட்ட பணிகளை டிட்கோ நிறுவனம் கவனிக்கிறது; நாங்கள் நில எடுப்புப் பணிகளை பார்க்கிறோம். சுற்றுச்சூழல் அனுமதியை திரும்பப் பெறுவது பற்றி தெரியவில்லை,'' என்றார்.
இதுகுறித்து, தொழில்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு விண்ணப்பித்த அறிக்கையில், திட்ட செலவு, 32,000 கோடி ரூபாய் என, குறிப்பிட்டது சர்ச்சையாகி விட்டது.
அரசின் உயரதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். விண்ணப்பத்தை திரும்பப் பெற்று, திட்ட மதிப்புத் தொகையை மாற்றி, மீண்டும் விண்ணப்பிக்க அறிவுறுத்தினர். விண்ணப்பத்தை திரும்பப் பெறவில்லை. கூடுதல் ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும். அந்த பணி நடக்கிறது. விண்ணப்பம் தொடர்ந்து பரிசீலனையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

