10 ரூபாய் நோட்டை அடையாளமாக வைத்து நகராட்சி நிர்வாக துறையில் நடந்த ஊழல்
10 ரூபாய் நோட்டை அடையாளமாக வைத்து நகராட்சி நிர்வாக துறையில் நடந்த ஊழல்
UPDATED : அக் 31, 2025 12:20 AM
ADDED : அக் 30, 2025 11:22 PM

சென்னை:'அமைச்சர் நேரு வசம் உள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வாரிய பணி நியமனத்தில் நடந்த மொத்த ஊழலும், 10 ரூபாயை மையமாக வைத்தே நிகழ்ந்துள்ளது' என, அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு இளநிலை பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், நகரமைப்பு திட்டமிடல் அதிகாரிகள் உட்பட, 2,538 பேரை தேர்வு செய்ததில் ஊழல் நடந்துள்ளது.
ஆவணம் பறிமுதல்
பதவிக்கு ஏற்ப, 25 - 35 லட்சம் ரூபாய் வரை வசூலித்துள்ளனர். இதுதொடர்பாக, நேருவின் தம்பி ரவிச்சந்திரன் மற்றும் அவரின் உறவினர்கள் வீடுகளில் ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளோம்.
'இந்த ஊழல் குறித்து வழக்குப்பதிவு செய்து, அதன் நகலை எங்களுக்கு அனுப்புங்கள். அப்போது தான் எங்களால் சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய முடியும்' என, தமிழக காவல் துறையின் பொறுப்பு டி.ஜி.பி., வெங்கடராமனுக்கு, அக்., 27ம் தேதி கடிதம் எழுதி உள்ளோம். ஊழல் தொடர்பாக, 232 பக்க ஆவணங்களையும் இணைத்துள்ளோம்.
பணி நியமன ஊழலில், அமைச்சர் நேருவின் தம்பிகள் ரவிச்சந்திரன், மணிவண்ணன் மற்றும் இவர்களின் உதவியாளர்கள் ரமேஷ், செல்வமணி மற்றும் கவி பிரசாத் ஆகியோருக்கு தொடர்பு உள்ளது.
பணி நியமனம் தொடர்பாக, இவர்களை தான் பலரும் அணுகி உள்ளனர். எங்களிடம் சிக்கிய ஆவணங்களில், 150 விண்ணப்பதாரர்கள், ரவிச்சந்திரன், மணிவண்ணன் உள்ளிட்டோர் வாயிலாக, முறைகேடாக பணி நியமனம் பெற்று இருப்பது தெரியவந்துள்ளது.
தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன்பே, ரவிச்சந்திரன் மற்றும் மணிவண்ணனின் உதவியாளர்களின், 'வாட்ஸாப்'பில் இருந்து தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. மதிப்பெண்ணில் குளறுபடி செய்து தேர்ச்சி பெற வைத்த தகவலும் அதில் இடம்பெற்று உள்ளது.
பணம் வசூலிப்பு
ரவிச்சந்திரன் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பட்டியல் ஒன்றில், விண்ணப்பதாரர்கள் பற்றிய குறிப்புகள் இருந்தன. அவர்களிடம் இருந்து பணம் வசூலிக்கப்பட்டது என்பதை அடையாளப்படுத்தும் விதமாக, சில குறியீடுகளும் எழுதி வைக்கப்பட்டு இருந்தன.
ரவிச்சந்திரனின் உதவியாளரான செல்வமணி தான், பணம் கொடுத்த விண்ணப்பதாரர்களுக்கு முன்கூட்டியே தேர்வு முடிவுகளையும், 'உங்களுக்கு பணி நியமன ஆணை உறுதியாகி விட்டது' என்ற தகவலையும் தெரிவித்துள்ளார்.
இதற்காக விண்ணப்பதாரர்களிடம் இருந்து, அவருக்கு நன்றி தெரிவித்தும் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு உள்ளன.
ரவிச்சந்திரனுடன் தொடர்பில் உள்ள கவிபிரசாத் என்பவர், தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற ஒருவரை, பணி நியமன இறுதி பட்டியலில் சேர்க்க வைத்துள்ளார். அரசு துறை ஒன்றில் இணை இயக்குநர் நிலையில் பணிபுரியும் மகளுக்கு, பணி நியமன ஆணை கிடைக்க, ரவிச்சந்திரனே ஏற்பாடு செய்துள்ளார் .
ரூபாய் படம்
ரவிச்சந்திரன், மணிவண்ணன் மற்றும் இவர்களின் உதவியாளர்கள் தங்களை அணுகிய விண்ணப்பதாரர்களிடம் முன்கூட்டியே, 10 ரூபாய் நோட்டில் உள்ள எண்களை, அவர்களிடம் தெரிவித்துள்ளனர். நாங்கள் அனுப்பி வைக்கும் நபர்களின், 'வாட்ஸாப்' செயலியில், இந்த, 10 ரூபாய் படம் இருக்கும்.
அதை அவர் காண்பித்தால், எண்களை சரிபார்த்து, அவர் தெரிவிக்கும் நிறுவனங்களின் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பி வைக்க வேண்டும் என, தெரிவித்துள்ளனர்.
மொத்த ஊழலும், அந்த, 10 ரூபாய் நோட்டை மையமாக வைத்தே நடந்துள்ளது. அந்த ரூபாய் நோட்டின் படத்தையும், அது தொடர்பாக நடந்த குறுஞ்செய்தி தகவல்களையும் திரட்டி உள்ளோம். இதுபற்றி, தமிழக காவல் துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளோம்.
இவ்வாறு கூறினர்.

