திருவேற்காடு கோவிலில் நடனமாடி 'ரீல்ஸ்' ஐகோர்ட் கண்டனம்: அறங்காவலர் மீது நடவடிக்கை
திருவேற்காடு கோவிலில் நடனமாடி 'ரீல்ஸ்' ஐகோர்ட் கண்டனம்: அறங்காவலர் மீது நடவடிக்கை
ADDED : அக் 17, 2024 11:17 PM
சென்னை:திருவேற்காடு கோவிலில்,'ரீல்ஸ்' வீடியோ எடுத்த அறங்காவலர் மற்றும் பெண் ஊழியர்களின் செயலுக்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு, ஹிந்து அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
நாகை மாவட்டம், தெற்கு பால்பண்ணைச்சேரி பகுதியைச் சேர்ந்த கே.ஜெயபிரகாஷ் என்பவர் தாக்கல் செய்த மனு:
சென்னை திருவேற்காட்டில் உள்ள தேவி கருமாரியம்மன் கோவில், பிரசித்தி பெற்றது. மிகவும் பழமையான இந்த கோவிலில், ஆண்டுதோறும் ஆடி மாதத் திருவிழா பிரமாண்டமான முறையில் நடக்கும்.
தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று, கோவிலில் நடந்த தர்மசங்கடமான நிகழ்வு பற்றிய காட்சிகள், ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவின.
அந்த காட்சியில், கோவிலின் அறங்காவலர் வளர்மதியுடன், 12 பெண்கள் இணைந்து, கோவில் கருவறையின் முன் நடனமாடியுள்ளனர். அதை, 'ரீல்ஸ்' வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
நடவடிக்கை இல்லை
கோவில் வளாகத்துக்குள் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதை புறந்தள்ளிய அறங்காவலர், கோவில் பணியாளர்களுடன் இணைந்து வீடியோ எடுத்தது, பக்தர்களின் உணர்வை புண்படுத்தியுள்ளது.
கோவிலில் மொபைல் போன் பயன்படுத்த தடை இருந்தும், ஏற்கனவே திட்டமிட்டு, ஒரே மாதிரியான உடை அணிந்து, வீடியோ எடுத்துள்ளனர்.
இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அறங்காவலர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, இரண்டு முறை புகார் மனு அளித்தேன்; எந்த நடவடிக்கையும் இல்லை.
கோவிலின் புனிதம், மதிப்பை குலைக்கும் வகையில் நடந்த அறங்காவலர் உள்ளிட்டோர் மீது, ஹிந்து அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அந்த வீடியோ பதிவை, நீதிபதியிடம் காண்பித்தார்.
அறிக்கை தாக்கல்
அறநிலையத் துறை தரப்பில் சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, ''கோவிலில் தடை செய்யப்பட்ட பகுதியில் வீடியோ பதிவு செய்யப்படவில்லை. வீடியோ பதிவு செய்த பகுதியானது, திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும் பகுதி.
''இருப்பினும், இதுதொடர்பாக, அறங்காவலர் உள்ளிட்டோரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது,'' என்றார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
பக்தர்கள், மக்கள் பக்தியுடன் கோவில்களுக்குச் செல்கின்றனர். அவ்வாறு இருக்கும் போது, ஒரு அறங்காவலரும், கோவில் ஊழியர்களும் எப்படி நகைச்சுவை வீடியோக்களை பதிவு செய்து, கேலி செய்ய முடியும்? அதுவும் சாமி படத்துக்கு முன்னால்?
இதுபோல சம்பவங்கள் நடக்க அனுமதித்தால், கடவுளுக்கு என்ன மரியாதை?
நுாற்றுக்கணக்கான பக்தர்கள் தினமும் கோவிலுக்குள் வரும்போது, ஒரு அறங்காவலர் எப்படி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார் என்பது ஆச்சரியமளிக்கிறது.
அந்த கோவிலில், பக்தர்கள் வேப்பிலை கட்டி வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர். அவ்வாறு இருக்கும்போது, சாமி மீது பயம் வேண்டாமா?
இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. நீதிமன்றம், இந்த சம்பவத்தை தீவிரமாக பார்க்கிறது. அறங்காவலர் உள்ளிட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுத்து, வரும் 29ம் தேதிக்குள் ஹிந்து அறநிலையத் துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.