கைதிகள் அளித்த விண்ணப்பங்கள் அரசிடம் அறிக்கை கேட்கிறது கோர்ட்
கைதிகள் அளித்த விண்ணப்பங்கள் அரசிடம் அறிக்கை கேட்கிறது கோர்ட்
ADDED : டிச 11, 2025 03:55 AM
சென்னை: தண்டனை குறைப்பு, முன்கூட்டி விடுதலை கோரி, கைதிகள் அளித்த விண்ணப்பங்கள் எத்தனை நிலுவையில் உள்ளன என்பது தொடர்பாக, தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகள் அறிக்கை தாக்கல் செய்யும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டு, சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ள கைதிகளுக்கு, தண்டனை குறைப்பு, முன்கூட்டி விடுதலை தொடர்பான, மாநில அரசுகளின் கொள்கைகளை கண்காணிப்பது குறித்து, தாமாக முன் வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என, அனைத்து மாநில உயர் நீதிமன்றங்களுக்கும், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவின் அடிப்படையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகளின், முன்கூட்டி விடுதலை குறித்த, அரசின் கொள்கைகளை கண்காணிப்பது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
இந்த வழக்கு, நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகளின் சட்டப் பணிகள் ஆணை குழுக்களை, தாமாக முன் வந்து, எதிர்மனுதாரர்களாக சேர்த்து உத்தரவிட்டனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், எத்தனை கைதிகள் முன்கூட்டி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்; எத்தனை கைதிகளின் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.
முன்கூட்டி விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்து, எத்தனை கைதிகளுக்கு எதிராக அறிக்கை உள்ளது; முன்கூட்டி விடுதலை கோரி, கைதிகள் கவர்னரிடம் அளித்த விண்ணப்பங்கள் எத்தனை நிலுவையில் உள்ளன என்பது தொடர்பாக, தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகள், விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

